ஜப்பானில் இருந்து மார்ச் மாதம் 25ல் மலேசியா திரும்பிய அலிக்சன் மங்குந்தொக், 34, என்ற ஆடவர் தனக்கு கொரோனா கிருமித்தொற்று இருக்கக் கூடும் என்ற அச்சம் காரணமாக பேருந்து, ரயில், உறவினர் என யாரையும் நாடாமல் 120 கி.மீ. நடந்தே வீட்டுக்குச் சென்றார்.
தன்னால் யாருக்கும் கொரோனா கிருமி தொற்றிவிடக்கூடாது என்ற நல்ல எண்ணத்திலேயே இவர் யாருடைய உதவியையும் நாடவில்லை. இவரின் இந்தச் செய்கை இணையத்தில் பலரையும் கவர்ந்து இருக்கிறது.
அலிக்சன், மலேசியாவில் தாம் தனித்து வைக்கப்படலாம் என்று எதிர்பார்த்து தன் உடைமைகளை உறவினர்களிடம் கொடுத்து அனுப்பிவிட்டார்.
ஆனால் அவரைப் பரிசோதித்த அதிகாரிகள், அலிக்சனுக்கு கொரோனா தொற்று இல்லை என்பதால் வீட்டில் இருந்தபடியே உடல் நலனைக் கண்காணித்து கொள்ளும்படி சொல்லி அனுப்பிவிட்டனர்.
அதையடுத்து அவர் கோத்தாகினபாலுவில் இருந்து 120 ki.மீ. தொலைவில் இருக்கும் கோத்தா மாருதுவுக்கு மூன்று நாட்கள் நடந்தே போய்ச் சேர்ந்தார்.
வழியில் ஓர் இடுகாட்டைக் கடந்தபோது நாய் ஒன்று அவரைப் பார்த்து பின்வரத் தொடங்கி கடைசிவரை அவருடனேயே நடந்து கோத்தா மாருதுவுக்கு வந்தது.
அந்த நாய்க்கு ஹச்சிகோ என்று பெயரிட்டு அதை அலிக்சன் தத்தெடுத்துக்கொண்டார்.
ஊர் போய்ச் சேர்ந்ததும் வீட்டுக்குச் செல்லாமல் தனி குடிசை ஒன்றில் தன் நாயுடன் அலிக்சன் தங்கி இருக்கிறார்.
தனக்கு கொரோனா இல்லை என்பதை அதிகாரிகள் திட்டவட்டமாக உறுதிப்படுத்திய பிறகுதான் உறவினர்களைச் சந்திக்கப்போவதாக அவர் தெரிவித்தார்.