பசிக்கொடுமை; சாலையில் அடிபட்டு இறந்த நாயின் மாமிசத்தை சாப்பிட்ட ஆடவர்

பசிக்கொடுமை; சாலையில் அடிபட்டு இறந்த நாயின் மாமிசத்தை சாப்பிட்ட ஆடவர்

2 mins read
ef0af9ee-843d-4d38-a915-43129c6eed89
திரு நருகா டெல்லியை நோக்கி சென்று கொண்டிருந்தபோது சாஹபுரா பகுதியில் ஒருவர் இறந்த நாயின் அருகமர்ந்து அதன் மாமிசத்தை சாப்பிட்டுக் கொண்டிருப்பதை கண்டதாகக் குறிப்பிட்டுள்ளார். படங்கள்: ஊடகம் -
multi-img1 of 2

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிக்கித் தவிக்கும் லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் பசியுடன் போராடுகிறார்கள்.

ஊரடங்கு நடப்பில் இருப்பதால் பலர் தங்களது சொந்த ஊர்களுக்கு நடந்தே செல்கின்றனர்.

தங்களது உடைமைகளையும் பிள்ளைகளையும் சுமந்துகொண்டு பல நூறு கிலோமீட்டர் தூரத்தை அவர்கள் கடப்பது பற்றிய செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன.

ஆனால், பசியின் கொடுமை ஒருவரை எந்த அளவுக்கு பாதித்துள்ளது என்பதைக் காட்டக்கூடிய பதறவைக்கும் சம்பவம் ஜெப்பூரில் நிகழ்ந்துள்ளது.

டெல்லி - ஜெய்ப்பூர் சாலையில் அடிபட்டு இறந்து கிடந்த நாயின் உடலை பசிக்கொடுமையில் வாடிய ஒருவர் சாப்பிட்டதைக் காட்டும் காணொளி சமூக வலைதளங்களில் பரவியது.

இதுதொடர்பாக, ஜெய்ப்பூரை சேர்ந்த பிரதுமன் சிங் நருகா என்பவர் யூடியூப்பில், கடந்த 18ஆம் தேதி காணொளி ஒன்றை பதிவிட்டுள்ளார்.

திரு நருகா டெல்லியை நோக்கி சென்று கொண்டிருந்தபோது சாஹபுரா பகுதியில் ஒருவர் இறந்த நாயின் அருகமர்ந்து அதன் மாமிசத்தை சாப்பிட்டுக் கொண்டிருப்பதை கண்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

"உங்களுக்கு சாப்பிட உணவு இல்லையா? நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள்?" என அந்த ஆடவரிடம் சத்தமிட்டு கேட்ட நருகா, அவரை சாலையின் ஓரத்தில் காத்திருக்கச் சொல்கிறார்.

அதன்பின் அந்த ஆடவருக்கு உணவும் தண்ணீரும் வழங்கப்பட்டது.

இந்த காணொளியைக் கண்ட பலரும் தங்கள் அனுதாபங்களைத் தெரிவித்து வருகின்றனர். சிலர் தங்களது கோபத்தையும் பதிவுகளாக வெளிப்படுத்தியுள்ளனர்.

அந்தக் காணொளியை ஃபேஸ்புக்கில் பதிவேற்றிய நருகா, "மனிதநேயம் மட்கிப்போனதைக் கண்டு வெட்கப்படுகிறேன். யாரும் அவருக்கு உதவ வாகனங்களை நிறுத்தவில்லை என்பது கவலை அளிக்கிறது. தயவுசெய்து அவர்களுக்கு உதவுங்கள்," என்று குறிப்பிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்