ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கொரோனாவில் உயிரிழந்த 70 வயது முதியவரின் உடலை நகராட்சி ஊழியர்கள் மண் அள்ளும் இயந்திரத்தின் மூலம் தூக்கிச் சென்று அடக்கம் செய்தது பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.
கரோனாவில் உயிரிழந்தவர்களைக் கண்ணியத்துடன் அடக்கம் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில், சடலத்தைக் கையாளும் விதிமுறைகளும் குறிப்பிடப்பட்டிருந்தன.
இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய நகராட்சி ஊழியர்கள், ஆணையர், சுகாதார ஆய்வாளர் ஆகியோரை மாவட்ட நிர்வாகம் பணியிடைநீக்கம் செய்துள்ளது.
பழசா எனும் கிராமத்தில் முதியவர் உடல் நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் வியாழக்கிழமை மாலை உயிரிழந்தார். அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கரோனா தொற்று இருந்தது அடுத்த நாள் காலை தெரியவந்தது. இதனால் அந்த முதியவரின் உடலை அடக்கம் செய்யும் நடைமுறைகளில் உறவினர்கள் யாரும் ஈடுபடவில்லை.
இந்நிலையில், நகராட்சி அதிகாரிகள் அந்த முதியவரின் உடலை இடுகாட்டில் அடக்கம் செய்வதாக அறிவித்தனர். அதன்படி நகராட்சி ஊழியர்கள் சிலர் முறைப்படி பிபிஇ பாதுகாப்பு உடை அணிந்து வந்தனர்.
ஆனால், அந்த முதியவரின் உடலை அவர்கள் யாரும் கையாளவில்லை. மண் அள்ளும் இயந்திரம் மூலம் தூக்கிச் சென்று இடுகாட்டில் அடக்கம் செய்தனர்.
இந்தச் சம்பவத்தை காணொளியாக்கிய சிலர் சமூக வலைத்தளத்தில் பரப்பினர்.
இந்நிலையில் இதேபோன்ற சம்பவம் இதே ஸ்ரீகாகுளம் மாவட்டம் சேம்பட்டையில் நடந்தது. 40 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் கொரோனாவில் உயிரிழந்ததையடுத்து, அந்தப் பெண்ணின் உடலையும் தூக்கிச் சென்று அடக்கம் செய்யாத நகராட்சி அதிகாரிகள் டிராக்டரில் வைத்து எடுத்துச் சென்று இடுகாட்டில் அடக்கம் செய்துள்ளனர்.
இவ்விரு சம்பவங்களின் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online