இந்தியாவில் நேற்று திங்கட்கிழமை ஒரே நாளில் 418 பேர் உயிரிழந்ததை அடுத்து இந்தியாவில் கொரோனா கிருமித் தொற்றால் பலியானவர்களின் எண்ணிக்கை 16,893 அதிகரித்துள்ளது.
மேலும் திங்கட்கிழமை ஒரே நாளில் புதிதாக 18,522 பேருக்கு கொரோனா கிருமித் தொற்று ஏற்பட்டதை அடுத்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 5,66,840 ஆக அதிகரித்துள்ளது.
அதேவேளையில் செவ்வாய்கிழமை காலை வரையிலான நிலவரப்படி 13,099 பேர் கொவிட் 19 நோயிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 3,34,821ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கொவிட் 19 நோயால் தாக்கப்பட்டவர்களில் இதுவரை 59 விழுக்காட்டினர் குணமடைந்துள்ளனர் என்றும் தற்போது சுமார் 2.15 லட்சம் பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
டெல்லியில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 85 ஆயிரத்தைக் கடந்துள்ள நிலையில் அங்கு கடந்த மாதம் 18ஆம் தேதி தொடங்கி நேற்று முன்தினம் வரை சுமார் 99 ஆயிரம் பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 7,414 பேருக்கு கிருமித்தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.