மும்பையில் வரலாறு காணாத மழை
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம், தெற்கு மும்பையில் உள்ள கொலாபா பகுதியில் 46 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஆகஸ்ட் மாதத்தில் கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. கடந்த மூன்று தினங்களாக நீடிக்கும் மழையால் அப்பகுதி மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். நேற்று முன்தினம் ஒரே நாளில் 333 மில்லி மீட்டர் மழை பதிவானது. இது 1974ஆம் ஆண்டுக்கு பிறகு ஆகஸ்ட் மாதத்தில் ஒரே நாளில் பதிவான அதிக மழை பொழிவாகும்.
ஆந்திராவில் ஆகஸ்ட் இறுதிவரை நிபந்தனைகளுடன் கூடிய ஊரடங்கு
அமராவதி: ஆந்திர மாநிலத்தில் ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு நேற்று முதல் உடற்பயிற்சிக் கூடங்கள், யோகா பயிற்சி நிலையங்களும் இயங்க சில நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும் மதுக்கூடங்கள், திரையரங்குகள், நீச்சல் குளங்களை திறக்க அனுமதி வழங்கப்படவில்லை. மேலும் பள்ளி, கல்லூரிகள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்.
கேரளா: வெளிநாடுகளில் வேலை இழந்தோருக்கு உதவித்தொகை
திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா கிருமித்தொற்றின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா விவகாரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அம்மாநில அரசு பல்வேறு நிவாரணங்களை அறிவித்து வருகிறது. அதன்படி வெளிநாடுகளில் பணியாற்றி அண்மையில் வேலை இழந்தோருக்கு உதவும் வகையில் தலா ஐந்தாயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இதற்காக 50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
முதல்வர் சிவராஜ் குணமடைந்தார்
போபால்: கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் குணமடைந்தார். இதையடுத்து அவர் நேற்று வீடு திரும்பியதாக தெரிவிக்கப்பட்டது.