இலங்கையின் கடற்பகுதியில் எண்ணெய்க் கப்பலில் நேற்று பற்றிய தீ இன்றும் எரிந்தது. இந்தியாவையும் இலங்கையையும் சேர்ந்த தீயணைப்பாளர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவர இன்று மாலை வரை கடுமையாகப் போராடினார்கள்.
கப்பலின் இயந்திரப் பகுதியில் கொதிகலன் வெடித்ததன் காரணமாக பிலின்பீன்ஸைச் சேர்ந்த கப்பல் சிப்பந்தி உயிரிழந்தார்.
கப்பலில் இருந்த மற்ற 22 பேரும் உயிருடன் மீட்கப்பட்டனர். கொதிகலன் வெடித்ததே தீப்பற்றியதற்குக் காரணம் என்று இலங்கைக் கடற்படை பேச்சாளர் இன்டிகா டி சில்வா கூறினார்.
இலங்கையின் கிழக்கே 38 கடல் மைல் தூரத்தில் உள்ள சங்கமன்கந்தா நீரிணையில் ‘நியூ டைமண்ட்’ என்னும் அந்த எண்ணெய்க் கப்பலில் தீ மளமளவென எரிவதையும் அதிலிருந்து அடர்த்தியான கரும்புகை வான்நோக்கி நீள்வதையும் காட்டும் படங்களும் காணொளிகளும் இணையத்தில் பரவின.
குவைத்திலிருந்து சுமார் இரண்டு மில்லியன் பீப்பாய்களில் 270,000 டன் கச்சாய் எண்ணெய்யை ஏற்றிக்கொண்டு ஆகஸ்ட் 23ஆம் தேதி இந்தியாவின் பாரதீப் துறைமுகம் நோக்கி அக்கப்பல் சென்றது.
பனாமா கொடி தாங்கிய அந்தக் கப்பலை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தனது சேவைக்காக ஜூலை மாத இறுதிவாக்கில் பெற்றிருந்தது.
திட்டமிட்டபடி இன்று காலை அந்தக் கப்பல் பாரதீப் துறைமுகத்தைச் சென்று சேர்ந்திருக்க வேண்டும்.
டீசல் உள்ளிட்ட எரிபொருள் இருப்பதால் தீ அணையாமல் மேலும் பரவுவதால் இரண்டாவது நாளாக அந்தக் கப்பல் எரிந்துகொண்டு இருந்தது.
முழுமையாக தீ பரவினால் கப்பல் வெடித்துச் சிதறும் ஆபத்து இருப்பதாகவும் அதன்மூலம் கடலில் பெருமளவு எண்ணெய் கலக்கும் சாத்தியம் இருப்பதாகவும் கடல் துறையினர் கூறினர்.
கடல்நீர் மட்டத்திலிருந்து பத்து மீட்டர் உயரத்தில் கப்பலில் இரண்டு மீட்டர் வெடிப்பு காணப்பட்டதாக இன்று பிற்பகலில் இந்திய கடலோரக் காவல்படை அதன் டுவிட்டரில் தெரிவித்தது.
தீயணைப்புப் பணியில் இந்தியா, இலங்கையைச் சேர்ந்த ஐந்து கப்பல்களும் ஒரு விமானமும் ஈடுபடுத்தப்பட்டன.