ஹைதராபாத்: ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி விரைவில் இந்தியாவுக்கு வருகிறது.
முதற்கட்டமாக 100 மில்லியன் ‘ஸ்புட்னிக் 5’ தடுப்பூசிகள் இந்தியாவில் பயன்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இவற்றை வைத்து ஹைதராபாத்தில் உள்ள ‘டாக்டர் ரெட்டிஸ்’ மருந்து நிறுவனம் மூன்றாம் கட்ட பரிசோதனை நடவடிக்கையை மேற்கொள்கிறது.
‘ஸ்புட்னிக்’ தடுப்புசி தற்போது ரஷ்யாவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இந்தத் தடுப்பூசியை இந்தியாவில் பரிசோதனை செய்வது, அது வெற்றியடையும் பட்சத்தில் தடுப்பூசியை இந்தியாவிலேயே தயாரிப்பது ஆகியவை குறித்து பேச்சுவார்த்தை நடந்து வந்தது.
ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியம் இதுதொடர்பாக இந்திய நிறுவனத்துடன் ஒத்துழைக்க ஒப்புக்கொண்டதாகவும் செய்தி வெளியானது.
இந்நிலையில் டாக்டர் ரெட்டிஸ் நிறுவனம் 100 மில்லியன் ‘ஸ்புட்னிக்’ தடுப்பூசிகளை தயாரிக்கும் என்றும் அவற்றைக் கொண்டு மூன்றாம் கட்ட பரிசோதனைகளை மேற்கொள்ளும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.