“குழந்தைகளுக்கு மருத்துவ வசதிக்காகவும் கடன்களை அடைக்கவும், தாயின் உடல் உறுப்புகள் விற்பனைக்கு (இதயம் உட்பட).”
- கேரளாவின் கொச்சிக்கு அருகில் உள்ள வரப்புழா எனும் ஊரில் சாலையோரம் அமைக்கப்பட்ட கூடாரத்தில் எழுதி ஒட்டப்பட்ட வாசகம் இது.
வெறும் பதாகை அல்ல.
மூன்று பிள்ளைகளுக்குத் தாயான 44 வயது சாந்தியின் உருக்கமான வேண்டுகோள் இது.
விபத்து ஒன்றில் பலத்த காயம் அடைந்த இரு மகன்கள் ... நரம்பியல் நோயால் அவதிப்படும் மகள்...
இவர்களைப் பார்த்துக்கொள்ள வேண்டியிருப்பதால் சாந்தியால் வேலை எதற்கும் செல்ல இயலவில்லை. அவரது கணவரும் இவர்களுடன் இல்லை.
கொஞ்சம் கொஞ்சமாக வாங்கிய கடனும் சேர்ந்துவிட்ட நிலையில், வாடகை கொடுக்க இயலாததால் வீட்டிலிருந்து வெளியேறி சாலையோரத்தில் கூடாரம் அமைத்து தங்கியது அந்தக் குடும்பம்.
வேறு வழியின்றி, கடன்களை அடைக்கவும் பிள்ளைகளின் எதிர்காலம் கருதியும் தனது உடல் உறுப்புகளை விற்க முன்வந்தார் அந்தத் தாய்.
இந்த விவகாரம் அரசாங்கத்தின் கவனத்துக்கு வந்ததும் அந்தக் குடும்பம் ஒரு காப்பகத்துக்கு மாற்றப்பட்டதுடன் பிள்ளைகளின் மருத்துவச் செலவை மாநில அரசாங்கம் கவனித்துக்கொள்ளும் என்று கூறப்பட்டது.
சில தொண்டூழிய அமைப்புகளும் அவரது செலவுகளைச் சமாளிக்க முன்வந்துள்ளன. தற்போது அவர்கள் மீண்டும் வாடகை வீட்டில் குடியேறியுள்ளனர். வடக்கு கேரளாவைச் சேர்ந்த இந்தக் குடும்பத்தினர் மகளின் நரம்பியல் சிகிச்சைக்காக கொச்சிக்கு வந்ததாகக் கூறப்படுகிறது.