இந்தியாவின் ஒடிசா மாநில சட்டப் பேரவைக்கு முன்பாக, முக்கிய சாலையின் நடுவில், தன் தாயின் கழுத்தில் கத்தியை வைத்து, தொண்டையைக் கிழித்துவிடப்போவதாக மிரட்டிய இளையரால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவியது.
சில அரசியல்வாதிகளின் பெயர்களையும் இரண்டு அமைச்சர்களின் பெயர்களையும் குறிப்பிட்டு, “ஊழல்வாதிகளான அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல்வர் நவீன் பட்நாயக் நல்லவர்; ஆனால், அமைச்சர்கள் ஊழல்வாதிகள், மக்களைத் துன்புறுத்துபவர்கள்,” என்று கூறிய அந்த இளையர், போலிசார் தம்மை நெருங்கினால் தாயைக் கொன்றுவிடப்போவதாக மிரட்டினார்.
அந்த இளையரிடமிருந்து சாமர்த்தியமாக அவரது தாயாரை போலிசார் மீட்டனர்.
பின்னர் தாயையும் மகனையும் விசாரித்த போலிசார், அந்த இளையரின் மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதையும் சில ஆண்டுகளாக அவர் சிகிச்சை எடுத்து வருவதையும் அறிந்து கொண்டனர்.
அதனையடுத்து. கட்டாக்கில் இருக்கும் எஸ்சிபி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அந்த இளையர் அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்தப் பரபரப்பான சம்பவத்தால் சச்சிவாலயா மார்க் சாலையில் சற்று நேரத்துக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.