இந்தியாவின் உள்விவகாரங்கள் தொடர்பில் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (ஐசிஓ)கருத்து தெரிவிப்பதை ஏற்க இயலாது என இந்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவின் காஷ்மீர் கொள்கை குறித்து அந்த அமைப்பு தெரிவித்த கருத்துகள் தவறானவை என மத்திய வெளியுறவு அமைச்சு அறிக்கை ஒன்றில் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளது.
இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்ற அமர்வு நைஜர் நாட்டின் மியாமி நகரில் கடந்த 27-29 தேதிகளில் நடைபெற்றது.
இதையடுத்து வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘ஐசிஒ’ அமர்வுகளில் காஷ்மீர் விவகாரம் குறித்துப் பேசுவதற்கு பாகிஸ்தான் தொடர்ந்து ஒத்துழைப்பு அளித்து வருவதாக அந்த அமைப்புக் குறிப்பிட்டிருந்தது.
இது இந்திய அரசுக்குக் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பை பாகிஸ்தான் தனது கைப்பாவையாகப் பயன்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ள இந்திய வெளியறவு அமைச்சு, காஷ்மீர் விவகாரம் குறித்து அந்த அமைப்பு தெரிவித்துள்ள கருத்துகள் உண்மைக்குப் புறம்பானவை என்று தெரிவித்துள்ளது.
இதுபோன்ற செயல்பாட்டை அந்த அமைப்பு எதிர்காலத்தில் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ள இந்திய அரசு, குறிப்பிட்ட ஒரு நாடு தன்னைப் பயன்படுத்திக்கொள்ள ‘ஐசிஒ’ அனுமதிப்பது வருந்தத்தக்கது எனவும் கூறியுள்ளது.
“அண்மைய அமர்வில் அந்த அமைப்பால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் இந்தியா குறித்து தவறான, அடிப்படை ஆதாரமற்ற, தேவையற்ற குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. இதை இந்தியா கடுமையாகவும் திட்டவட்டமாகவும் நிராகரிக்கிறது.
“காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் தவிர்க்க முடியாத பகுதி. ஜம்மு காஷ்மீர் விவகாரம் உட்பட இந்தியாவின் உள் விவகாரங்களில் தலையிட இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்புக்கு எந்தவித இடமும் இல்லை. இதைத் தொடக்கம் முதலே இந்தியா வலியுறுத்தி வருகிறது,” என மத்திய வெளியுறவு அமைச்சு தமது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளது.
மத சகிப்புத்தன்மை, தீவிரவாதம் உள்ளிட்ட விவகாரங்களில் அருவருப்பான பதிவுகளைக் கொண்ட ஒரு நாடு இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பைப் பயன்படுத்திக் கொள்கிறது என்று பாகிஸ்தானை மறைமுகமாக சாடி உள்ளது இந்தியா.