விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் வேதனை அளிப்பதாகவும் புதிய வேளாண் சட்டங்களை ஆதரிக்க இயலாது என்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் நடைபெற்ற டெல்லி சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், வேளாண் சட்ட நகல்களைக் கிழித்தெறிந்தார். அப்போது விவசாயிகளுக்குத் தம்மால் துரோகம் செய்ய இயலாது என்று அவர் குறிப்பிட்டார்.
வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறவைக்க விவசாயிகள் இன்னும் எத்தனை தியாகங்களைச் செய்யவேண்டும் என மத்திய அரசு எதிர்பார்க்கிறது? என்று கேள்வி எழுப்பிய முதல்வர் கெஜ்ரிவால், போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகளில் இதுவரை 20 பேர் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தார்.
“நான் முதலில் இந்தத் தேசத்தின் குடிமகனாக இருக்கவேண்டும். அதன்பிறகு முதல்வராக இருக்கிறேன். இந்தச் சட்டப்பேரவை வேளாண் சட்டங்களை நிராகரிக்கிறது. விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றுமாறு மத்திய அரசை வலியுறுத்துகிறேன்,” என்றார் முதல்வர் கெஜ்ரிவால்.
இந்நிலையில் வேளாண் சட்டங்கள் தொடர்பாக பரப்பப்படும் வதந்திகளை விவசாயிகள் நம்பவேண்டாம் என பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் விடுத்துள்ள வேண்டுகோளைச் சுட்டிக்காட்டி டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், நாட்டு மக்கள் அனைவருக்கும் இத்தகவல் சென்றடைய வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் விவசாய சங்கங்களுக்கு அனுப்பியுள்ள கடிதம் ஒன்றில் புதிய வேளாண் சட்டங்களால் விலைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை நிறுத்தப்படும் என்று சிலதரப்பினர் வதந்தி பரப்புவதாகச் சாடியுள்ளார்.
விவசாயிகள் ரயில்வே தண்டவாளங்களில் அமர்ந்து நடத்தும் போராட்டம் காரணமாக எல்லையில் நாட்டைக் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள வீரர்களுக்கு உணவுப் பொருட்களை அனுப்ப முடியவில்லை என அவர் கவலை தெரிவித்துள்ளார்.