விவசாயிகளின் இரண்டு மாதப் போராட்டம் தொடர்பாக செய்திகளைச் சேகரித்து வெளியிடும் ஊடகவியலாளர்கள் மீது மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து பொய் வழக்குகள் தொடுப்பதாக பல்வேறு ஊடகவியலாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளன.
மூத்த ஊடகவியலாளர்கள் சிலர் மீது தேசத்துரோக வழக்கு பதிவாகி இருப்பதை சுட்டிக்காட்டியுள்ள அச்சங்கங்கள், இத்தகைய அச்சுறுத்தும் போக்கை ஏற்க இயலாது என குறிப்பிட்டுள்ளன.
உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களில்தான் இத்தகைய வழக்குகள் அதிகம் பதிவாகி வருவதாக சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
‘இந்தியா டுடே’வைச் சேர்ந்த ராஜ்தீப் சர்தேசாய், ‘நேஷனல் ஹெரால்ட்’ பத்திரிகையின் மூத்த ஆலோசகர் மிருனல் பாண்டே, ‘க்வாமி ஆவாஸ்’ பத்திரிகையின் ஆசிரியர் ஜாஃபர் ஆகா, ‘தி கேரவன்’ பத்திரிகையின் நிறுவனர் பரேஷ் நாத் உள்ளிட்ட பலர் மீது கடந்த வியாழக்கிழமை தேசத்துரோக வழக்கு பதிவாகி உள்ளது.
தவறான செய்திகளை வெளியிடுவது, அச்செய்திகளை தங்களின் சமூக வலைத்தளப் பக்கங்கள் மூலம் பரப்புவது ஆகிய குற்றச்சாட்டுகள் ஊடகவியலாளர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன.
அண்மைய வன்முறைச் சம்பவங்களின்போது போராட்டத்தில் பங்கேற்ற ஒருவர் போலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. ஆனால் இத்தகவல் உண்மை அல்ல என்று மறுத்துள்ள போலிசார் உயிரிழந்த ஆடவர் தாம் ஓட்டி வந்த டிராக்டர் வாகனம் கவிழ்ந்ததில், அதன் கீழே சிக்கி பலியானதாக கூறியுள்ளனர்.
ஊடகங்களில் பொய்யான செய்தி வெளியானதாகவும் குற்றம்சாட்டி உள்ளனர். இதையடுத்து மேற்குறிப்பிடப்பட்ட ஊடகவியலாளர்கள் இந்தக் குற்றச்சாட்டையும் எதிர்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் தேசத்துரோக வழக்கின் மூலம் ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் போக்கை அரசுகள் கடைப்பிடிப்பதாக ஊடகச் சங்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன. தேசத்துரோக வழக்கு தொடுப்பதற்கு என்ன அவசியம் எழுந்துள்ளது என்றும் அவை கேள்வி எழுப்பியுள்ளன.
பத்திரிகை சுதந்திரம் உள்ள நாடுகளின் பட்டியலில் இரண்டு இடங்கள் கீழிறங்கி இந்தியா 142வது இடத்தில் உள்ளது.