கோல்கத்தா: தமது தேர்தல் பிரசாரத்துக்குக் தடை விதிக்கப்பட்டதைக் கண்டித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று போராட்டத்தில் ஈடுபட்டார்.
கோல்கத்தாவில் உள்ள காந்தி மூர்த்தி பகுதியில் அவர் இப்போராட்டத்தை மேற்கொண்டார்.
முன்னதாக தேர்தல் விதிமுறைகளை மீறி மம்தா பிரசாரத்தில் ஈடுபட்டதாக எதிர்க்கட்சிகள் புகார் எழுப்பின. இதுகுறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து திங்கட்கிழமை இரவு 8 முதல் செவ்வாய்க்கிழமை (நேற்று) இரவு 8 மணி வரை பிரசாரம் மேற்கொள்ள அவருக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
போராட்டத்தை அடுத்து காந்தி மூர்த்தி பகுதியில் தற்காலிக கூரை அமைக்கப்பட்டிருந்தது.
அதன் கீழே சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி முதல்வர் மம்தா போராட்டத்தில் ஈடுபட்டார். பாதுகாப்பு அதிகாரிகளும் மற்றவர்களும் சற்று தூரத்தில் அமர்ந்திருந்தனர்.
இந்நிலையில் தேர்தல் ஆணையத்தில் அளித்துள்ள மனு ஒன்றில், சர்ச்சைக்குரிய வகையில் அவதூறான கருத்துக்களைத் தெரிவிக்கும் பாஜக தலைவர்கள் மீதும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திரிணாமூல் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.
போராட்டத்தையொட்டி செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் மம்தா, இந்திய தேர்தல் ஆணையம் ஜனநாயக விரோதப் போக்கை கடைப்பிடிப்பதாக குற்றம்சாட்டினார். நாட்டின் அரசியலமைப்புக்கு விரோதமான தேர்தல் ஆணையத்தின் முடிவை தாம் கண்டிப்பதாக அவர் கூறினார்.
மேற்கு வங்கத்தில் எதிர்வரும் 17ஆம் தேதி ஐந்தாம் கட்டத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.
இந்நிலையில், தேர்தல் நடைபெற உள்ள முர்ஷிதாபாத் மாவட்டத்தின் ஷாம்ஷெர்கஞ்ச் பகுதியில் இருந்து 14 வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டு உள்ளன.
இதற்கிடையே, பிரசாரத்தின்போது அவதூறாகப் பேசியதால் பாஜக மூத்த தலைவர் ராகுல் சின்ஹாவுக்கும் 48 மணி நேரம் பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.