காணாமல் போன மேலும் பலரைத் தேடும் பணி தொடர்கிறது
மும்பை: 'டவ்தே' புயல் காரணமாக மும்பை அருகே எண்ணெய்க் கிணற்றில் வேலைபார்க்கும் ஊழியர்களின் கப்பல் 261 பேருடன் நடுக்கடலில் மூழ்கியது. அவர்களில் 188 பேர் காப்பாற்றப்பட்டனர்.
கடல்படைக் கப்பல்கள், விமானங்கள், ஹெலிகாப்டர்கள் என முழு வீச்சில் தேடி மீட்கும் பணியில் இறங்கியுள்ளது இந்தியக் கடற்படை.
இந்நிலையில் 37 பேரின் உடல்களை இந்தியக் கடற்படை வீரர்கள் மீட்டுள்ளனர். மேலும் எஞ்சியவர்களைத் தேடும் பணியை இந்திய கடற்படை தொடர்கிறது.
மூழ்கிய அக்கப்பலின் தலைமைப் பொறியாளரான ரஹ்மான் ஷேக், "இதுபோன்ற ஆபத்தில் உயிரைக் காத்துக்கொள்வதற்காக கப்பலில் பொருத்தப்பட்டிருந்த மிதவை வளையங்கள் பெரும்பாலானவற்றில் காற்றுப் போயிருந்தது. இல்லையெனில் கப்பலில் இருந்த அனைவரும் உயிர்பிழைத்திருப்பர்," என்று கூறினார்.
முழங்காலில் பலத்த காயங்களுடன் டார்டியோ நகரில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஷேக், "புயல் குறித்த எச்சரிக்கை ஒரு வாரத்திற்கு முன்பே எங்களுக்குக் கிடைத்தது. இதையடுத்து அங்கிருந்த மற்ற கப்பல்கள் அனைத்தும் அந்தக் கடல் பகுதியை விட்டு துறைமுகத்திற்குத் திரும்பிவிட்டன.
"நான் எனது கப்பல் கேப்டன் பல்விந்தர் சிங்கிடம், இதுகுறித்துக் கூறி, நாமும் துறைமுகத்திற்குத் திரும்புவதே நல்லது என்று எடுத்துரைத்தேன். ஆனால், அதற்கு அவரோ, புயல் காற்று 40 கி.மீ. வேகத்திற்கு மேல் அடிக்காது என்றும் புயல் இன்னும் ஓரிரு மணி நேரங்களில் மும்பையைக் கடந்து விடும் என்றும் கூறிவிட்டார். ஆனால், புயலின் சீற்றமோ, நாங்கள் கொஞ்சமும் நினைத்துப் பார்க்காத அளவு 100 கி.மீ. வேகத்தில் வீசியது. அந்தக் காற்றின் வேகத்தில் கப்பலின் ஐந்து நங்கூரங்கள் உடைந்து கப்பல் கடலுக்குள் இழுத்து சாய்க்கப்பட்டது. புயலின் சீற்றத்தைச் சமாளிக்க முடியாமல் திணறினோம்," என்று கூறினார்.
இந்நிலையில் உயிர்பிழைத்த 19 வயது மனோஜ் கூறுகையில், "கப்பல் மூழ்கத் தொடங்கியவுடன் நாங்கள் கவலை அடைந்தோம். நானும், மற்ற தொழிலாளர்களும் உயிர்காக்கும் ஜாக்கெட் அணிந்து கொண்டு தண்ணீரில் குதித்தோம். அது மிகவும் ஒரு மோசமான சூழ்நிலை. நான் உயிர்பிழைப்பேன் என்று நினைத்துப் பார்க்கவே இல்லை. ஆனால் உயிர் பிழைக்க வேண்டும் என்ற உறுதியுடன் 7 முதல் 8 மணி நேரம் நீச்சல் அடித்துக் கொண்டே இருந்தேன். அப்போது தான் கடற்படையால் மீட்கப்பட்டேன். ஆனால் கடலில் எனது ஆவணங்கள் மற்றும் செல்போன் போய்விட்டது," என்று கண்ணீர்மல்கக் கூறினார்.
மனோஜ் கிதே கடந்த மாதம் தான் எண்ணெய்க் கிணற்றில் உதவியாளராக வேலைக்குச் சேர்ந்தார். தற்போது ஏற்பட்ட மோசமான அனுபவம் காரணமாக அவர் மீண்டும் எண்ணெய்க் கிணறு வேலைக்குச் செல்ல விரும்பவில்லை என கூறியுள்ளார்.
மகாராஷ்டிராவிலும் டவ்-தே புயல் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் 70% மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன.
குஜராத்தில் டவ்-தே புயலின் சீற்றத்துக்கு இதுவரை பலியானோர் எண்ணிக்கை 49 என தெரிவிக்கப்பட்டுள்ளது.