போபால்: கொவிட்-19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயி ரிழந்த தனது காதல் மனைவிக்கு கணவர் கோயில் கட்டி கும்பிட்டு வருகிறார்.
ஷாஜபூரில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள சம்ப்கேடா கிராமத்தைச் சேர்ந்த நாராயண் சிங் ரத்தோரின் மனைவி கீதாபாய். இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.
கொரோனா 2வது அலையில் நாராயண் சிங் ராத்தோரின் மனைவி கீதாபாய் இறந்துவிட்டார். இதனால் மனைவியின் நினைவில் அன்றாடம் மூழ்கி இருந்த நாராயண் சிங் ரத்தோர், மனைவிக்குக் கோயில் கட்ட முடிவு செய்தார்.
அதன்படி காதல் மனைவிக்கு அவரது சொந்த இடத்தில் கோவில் ஒன்றைக் கட்டியுள்ளார். அந்த கோயிலில் தனது மனைவியின் சிலையையும் அவர் நிறுவினார்.
தினந்தோறும் அவர் வழிபாடு செய்து வருகிறார். அவரது குடும்பத்தினரும் தினமும் சிலையை வணங்கி வருகின்றனர்.
இது குறித்து பேசிய ரத்தோரின் மூத்த மகன் லக்கி, "இந்தக் கோவில் என் தாய் எங்களை சுற்றி இருக்கிறார் என்ற உணர்வை ஏற்படுத்துகிறது." என்றார்.