புதுடெல்லி: ராஜஸ்தான் மாநிலத்தில் பாம்பைக் கொத்தவிட்டு ஒருவரைக் கொலை செய்வது அதிகரித்து வருவதாக, வழக்கு ஒன்றை விசாரித்த இந்திய உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.
ராஜஸ்தானில் பாம்பு கொத்தி, உயிரிழப்பது இயல்பான ஒன்று.
அவ்வகையில் ஆண்டுதோறும் ஏராளமானோர் இறக்கின்றனர் என்பதால் கொலைப் பழியைப் பாம்பின்மீது போட்டு தப்பிவிடலாம் என்று சதி செய்து, கொலை செய்கின்றனர் என்றும் இது தடுக்கப்பட வேண்டிய ஒன்று என்றும் நீதிபதிகள் கூறினர்.
ராஜஸ்தானில் ஜுஞ்சுனு என்ற மாவட்டத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு பாம்பு கொத்தியதில் சுபோத் தேவி என்பவர் உயிரிழந்தார்.
அந்த மாதின் மருமகளான அல்பனா என்பவர், தன் கள்ளக் காதலன், அவனுடைய நண்பன் ஆகியோருடன் சேர்ந்து ஒரு பாம்பைவிட்டு மாமியாரைக் கொத்தவிட்டு அவரைக் கொன்றுவிட்டது விசாரணையில் தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து, அம்மூவரும் கைதுசெய்யப்பட்டு, கடந்த ஓர் ஆண்டிற்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தங்களுக்குப் பிணை வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் அவர்கள் மனுத்தாக்கல் செய்தனர். அம்மனுவை விசாரித்த நீதிபதிகள் அவர்களுக்குப் பிணை வழங்க மறுத்துவிட்டனர்.