'இந்திய அறிவியலின் மாண்பை, கூட்டுமுயற்சியின் வெற்றியைக் கண்டு வருகிறோம்'
புதுடெல்லி: ஒரு பில்லியன் கொரோனா தடுப்பூசிகள் போட்டு இந்தியா வரலாறு படைத்திருப்பதாகப் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், இந்தச் சாதனையை எட்ட உதவிய ஒவ்வொருவருக்கும் நன்றி தெரிவிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
"நாம் இந்திய அறிவியலின் மாண்பை, கூட்டுமுயற்சியின், செயலாக்கத்தின் வெற்றியைக் கண்டு கொண்டிருக்கிறோம். வாழ்த்துகள் இந்தியா.
"ஒரு பில்லியன் தடுப்பூசிகள் செலுத்திவிட்டோம். மருத்துவர்கள், தாதியர்களுக்கு நன்றி," என்று பிரதமர் மோடி தமது பதிவில் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டோரின் எண்ணிக்கை 940 மில்லியன் ஆகும். அவர்கள் அனைவருக்கும் இரண்டு தடுப்பூசிகள் போடுவது என மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
இதையடுத்து தடுப்பூசிக் கொள்கை வகுக்கப்பட்டு, நாடு முழுவதும் தடுப்பூசி போடும் நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டது.
மாநில அரசுகள் தொடர்ந்து சிறப்பு முகாம்களை நடத்தி தடுப்பூசி போட்டுக்கொள்வோர் எண்ணிக்கை அதிகரிக்க உதவுகின்றன. அதன் பலனாக ஒரு பில்லியன் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையால் இந்தச் சாதனை சாத்தியமானது என மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா
தெரிவித்துள்ளார்.
தமது டுவிட்டர் பக்கத்தில், "வாழ்த்துகள் இந்தியா!" என்று குறிப்பிட்டுள்ள அவர் நேற்று நண்பகலில் ஒரு பில்லியன் தடுப்பூசிகள் போடும் மைல்கல்லை எட்டியதைக் குறிப்பிடும் வகையில் காணொளி ஒன்றையும் வெளியிட்டார்.
நாடு முழுவதும் இதுவரை, 75 விழுக்காட்டினருக்கு ஒரு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் ஒன்பது மாதங்களில் இந்தியா இதைச் சாதித்துள்ளது என்றும் மத்திய நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் கூறியுள்ளார்.
25 விழுக்காட்டினர் தகுதியிருந்தும் இன்னும் தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்வரவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
"முதல் தவணை தடுப்பூசிகூட செலுத்திக்கொள்ளாதவர்களை குறிவைத்துச் செயல்பட வேண்டும். இதுவரை 30% பேர் இரண்டு தவணை தடுப்பூசியும் போட்டுக் கொண்டுள்ளனர். 100 மில்லியன் பேர், இரண்டாவது தடுப்பூசிக்கான காலக்கெடு முடிந்தும் இன்னும் அதனை போட்டுக்கொள்ளவில்லை," என்றும் விகே.பால் கூறியுள்ளார்.
இதற்கிடையே, நேற்று முன்தினம் நாட்டில் 18,454 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 160 பேர் உயிரிழந்துவிட்டனர்.
இதற்கிடையே, உலக சுகாதார அமைப்பின் அங்கீகாரம் பெற்ற தடுப்பூசியை முழுவதுமாக போட்டுக்கொண்டுள்ள அனைத்துலகப் பயணிகள் இந்தியாவுக்கு வந்தால் தனிமைப்படுத்துதலுக்கு உட்படத் தேவையில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது.
வரும் 25ஆம் தேதி முதல் இந்த அறிவிப்பு அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஒரு பில்லியன் தடுப்பூசி போடப்பட்டது என்பது அனைத்து இந்தியர்களும் பெருமைப்பட வேண்டிய விஷயம் என்று காங்கிரஸ் எம்பி சசி தரூர் தெரிவித்துள்ளார்.
இதற்காக மத்திய அரசைப் பாராட்ட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் காங்கிரஸ் தலைமை அதிருப்தி அடைந்துள்ளது.
"தவறான மேலாண்மை, நிர்வாகத்தால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு, குணமடைந்த பின்பும் இன்னும் பக்கவிளைவுகளால் இருப்பவர்களை அவமதிப்பதாக சசி தரூர் கருத்து இருக்கிறது," என அக்கட்சி தெரிவித்துள்ளது.