ஜெய்சங்கர்: மக்களுக்கு உதவி கிடைப்பதை உறுதி செய்க
புதுடெல்லி: ஆப்கானிஸ்தான் மக்கள் நலமுடன் இருக்க வேண்டும் என்பதில் இந்திய அரசு உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானின் அண்டை நாடாகவும் நீண்ட கால நட்பின் அடிப்படையிலும் அந்நாட்டின் அண்மைய நிகழ்வுகள் குறித்தும் அந்நாட்டு மக்களின் துயரத்தை எண்ணியும் இந்தியா வருத்தம் அடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
'ஆா்ஐசி' எனப்படும் ரஷ்யா, இந்தியா, சீனா ஆகிய மூன்று நாடுகளைக் கொண்ட கூட்டமைப்பின் வெளியுறவு அமைச்சா்கள் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.
இதில் காணொளி வசதி மூலம் கலந்துகொண்டு பேசிய ஜெய்சங்கர், ஆப்கானிஸ்தானில் அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய, அனைவருக்கும் பிரதிநிதித்துவம் உள்ள அரசு அமைய இந்தியா ஆதரவளிப்பதாகக் குறிப்பிட்டார்.
"ஆப்கானிஸ்தானில் நிலவும் வறட்சியை எதிா்கொள்ள 50 ஆயிரம் மெட்ரிக் டன் கோதுமையை இந்திய அரசு அனுப்பி வைத்துள்ளது.
"அங்குள்ள மக்களுக்கு எந்தவித இடையூறும் அரசியலும் இல்லாமல் உதவிகள் கிடைப்பதை உறுதி செய்ய 'ஆா்ஐசி' நாடுகள் ஒன்றிணைந்து பணிபுரிய வேண்டும்," என்றார் ஜெய்சங்கர்.
பயங்கரவாதம், போதைப்பொருள் கடத்தல் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், அவற்றுக்கு எதிரான தங்களின் நடவடிக்கைகளை ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.
ஐநா பாதுகாப்பு மன்றத்தின் தற்காலிக உறுப்பினராக சேர்ந்தது முதல் அனைத்துலக, வட்டார விவகாரங்களில் சம்பந்தப்பட்ட தரப்பினர் ஏற்கக்கூடிய தீர்வுகளை எட்டுவதில் இந்தியா தனது பங்களிப்பை நிறைவாக அளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், ஐநா அமைப்பில் சில சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று வலியுறுத்திய அமைச்சர் ஜெய்சங்கர், கருத்தொற்றுமை என்ற போர்வையில், அதற்கான நடவடிக்கைகள் தடுக்கப்படுவதாகச் சாடினார்.
இதன் காரணமாக அனைத்துலகச் சமூகத்தின் ஜனநாயக உரிமைகள் மறுக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.