ஸ்ரீநகர்: கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் சீனா புதிய சாலைகள், நெடுஞ்சாலைகளை அமைத்து வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், அண்மைய சில தினங்களாக சீன ராணுவம் ஏவுகணை, ராக்கெட் படைப்பிரிவுகளை அங்கு குவித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, எல்லையில் மீண்டும் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.
ஏற்கெனவே தனது எல்லைப் பகுதிகளில் கஷ்கர், கார்குன்சா, ஹோட்டன் ஆகிய மூன்று இடங்களில் விமானத் தளங்களை அமைத்துள்ள சீனா, தற்போது மேலும் சில புதிய விமானத் தளங்களை அமைக்க முடிவு செய்துள்ளது.
இதையடுத்து, நெடுஞ்சாலைகளும் அமைத்து வருவதால் எல்லைப் பகுதியில் அதன் பலம் அதிகரித்துள்ளதாக 'இந்தியா டுடே' ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
இந்நிலையில், ஏவுகணை, ராக்கெட் படைப்பிரிவுகளைச் சேர்ந்த ஏராளமான வீரர்கள் திபெத் உடனான எல்லைப் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், ரகசிய தங்குமிடங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்படும் ஆளில்லா சிறிய ரக வானூர்திகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. திபெத்தைச் சேர்ந்த பலரை தனது ராணுவத்தில் சேர்த்து வருகிறது சீனா. அவ்வாறு தேர்வாகும் திபெத்தியர்கள் எல்லைப் பகுதிகளில் நிறுத்தி வைக்கப்படுகின்றனர்.
இந்த நடவடிக்கை தற்போது வேகம் எடுத்துள்ளதாகவும் சீன படையினரால் தாக்குப்பிடிக்க முடியாத அந்த நிலப்பரப்பில் மண்ணின் மைந்தர்களையே கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தி உள்ளதாகவும் அந்த ஊடகச் செய்தி மேலும் குறிப்பிடுகிறது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், நடப்பு குளிர்காலத்தை எதிர்கொள்வதில் சீன ராணுவம் தயார்நிலையில் இருப்பதாகவும் தங்குமிடம், சாலை இணைப்பு, சூழ்நிலைக்கேற்ப செயல்படுவது ஆகியவற்றில் சீனப்படைகள் கூடுதல் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருதரப்புக்கு இடையேயான பேச்சுவார்த்தைகளில் சீன ராணுவம் எல்லைப் பகுதிகளில் படைகளைக் குவித்து வருவது குறித்தும், கட்டுமானப் பணிகளை மேற்கொள்வது பற்றியும் இந்தியா தொடர்ந்து புகார் எழுப்பி வருகிறது. இந்நிலையில், சீனா மீண்டும் எல்லைப் பகுதியில் துருப்புகளைக் குவித்து வருகிறது.