பெங்களூரு: கர்நாடகாவில் நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.
பல்வேறு தரப்பினரின் கடும் எதிர்ப்பையும் மீறி ஊரடங்கை அமல்படுத்துவதாக அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனாவின் ஓமிக்ரான் வகை பாதிப்பு வேகமாகப் பரவி வருகிறது. இதுவரை 21 மாநிலங்களில் இந்த பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் 38 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அம்மாநில அரசு தொற்றுப்பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மீண்டும் தீவிரப்படுத்தி உள்ளது.
அத்தகைய நடவடிக்கைகளில் ஒன்றாக, நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்.
மாநில அரசின் இந்த முடிவுக்கு கர்நாடக திரையுலகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இரவு ஊரடங்கு காரணமாக திரைப்படப் படப்பிடிப்புகள் பாதிக்கப்படும் என அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இதே போல் உணவக, திரையரங்க உரிமையாளர்கள், கேளிக்கை விடுதிகள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட போதிலும், கர்நாடக அரசு எதையும் பொருட்படுத்தவில்லை.
தற்போதைய சூழலில் தொற்றுப்பரவலைக் கட்டுப்படுத்துவதற்குத்தான் அரசு முன்னுரிமை அளிக்கும் என்று ஆளும் தரப்பு திட்டவட்டமாகக் கூறியுள்ளது.
குஜராத், அசாம், ஹரியானா, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், டெல்லி உள்ளிட்ட மாநிலங்கள் ஏற்கெனவே இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தி உள்ளன.