புதுடெல்லி: இந்தியாவிடலிருந்து கோதுமை இறக்குமதி செய்ய எகிப்திய நாடு முடிவு செய்துள்ளதாக மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார். கோதுமை ஏற்றுமதியில் ரஷ்யாவும் உக்ரேனும் முன்னணியில் இருந்து வருகின்றன.
தற்போது உக்ரேனில் போர் நடந்து வருவதாலும் ரஷ்யா மீது பொருளியல் தடைகள் விதிக்கப்பட்டதாலும் அவை கோதுமை உள்ளிட்ட பொருள்களை ஏற்றுமதி செய்ய முடியாத நிலையில் உள்ளன. இந்தச் சூழ்நிலையை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி தனது சந்தையை விரிவுபடுத்திக் கொள்ள இந்தியா முயற்சிகளை எடுத்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக எகிப்தை இந்தியா அணுகிய நிலையில் கோதுமையை வாங்க அந்நாடு சம்மதம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
எகிப்து அதிகாரிகள் இந்தியாவுக்கு வந்து கோதுமைக் கிடங்குகளைப் பார்வையிட்டுச்சென்ற நிலையில் இந்த ஒப்புதல் கிடைத்துள்ளது. இந்தியாவிடம் இருந்து 10 லட்சம் டன் கோதுமையை வாங்க எகிப்து முடிவு செய்துள்ளதாக அமைச்சர் பியுஷ் கோயல் மேலும் தெரிவித்தார்.
இந்திய விவசாயிகளின் உழைப்பால் தானியக் களஞ்சியங்கள் நிரம்பியுள்ளதாகவும் அதைக்கொண்டு உலகின் உணவுத் தேவையை இந்தியா பூர்த்தி செய்யும் என்றும் தனது டுவிட்டர் பதிவில் பியுஷ் கோயல் குறிப்பிட்டு உள்ளார்.