புதுடெல்லி: கொவிட்-19 கிருமிக்கு எதிரான தடுப்பூசியைக் கட்டாயப்படுத்தி யாருக்கும் போடக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.
இந்தியாவில் கொவிட்-19 கிருமி பெருந்தொற்றுக்கு எதிராக கடந்த ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
தொற்றுப் பரவலுக்கு எதிரான மிகப்பெரிய பேராயுதமாக தடுப்பூசி கருதப்படுவதால் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளும்படி மக்களை மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்றன. இந்த வகையில், இந்தியாவில் இதுவரை 62.2% விழுக்காட்டு மக்களுக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 72.7% மக்கள் ஓர் ஊசி மட்டும் போட்டுக்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், கொரோனா தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனை விவரங்களை வெளியிட உத்தரவிடுமாறு ஜகேப் புலியெல் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், "தடுப்பூசி போட்டுக்கொள்ளு மாறு யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது," என்று தெரிவித்துள்ளது.
''தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கை இன்னும் குறைவாகவே உள்ளது. உரிய உத்தரவுகளைப் பின்பற்றுமாறு பரிந்துரைக்கிறோம்.
தடுப்பூசிப் போட்டுக்கொள்ளாத தனி நபர்களுக்கு எதிராக எந்த கட்டுப்பாடுகளையும் விதிக்கக் கூடாது.
அது போன்று ஏதேனும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தால், அதைத் திரும்பப் பெற வேண்டும்," என்றும் நீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.