உள்நாட்டில் உணவுப் பாதுகாப்பை உறுதிசெய்யும் பொருட்டு இந்தியா நடவடிக்கை
புதுடெல்லி: கோதுமை உற்பத்தியில் இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்தியா, அதன் ஏற்றுமதிக்குத் தடை விதித்துள்ளது.
உள்நாட்டில் உணவு பாதுகாப்பை உறுதி செய்யவும் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தவும் இந்தத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டு உள்ளதாக இந்திய அரசு கூறியது.
ரஷ்யாவின் படையெடுப்பு காரணமாக உக்ரேனில் இருந்து தானிய ஏற்றுமதி முடங்கிய நிலையில், உலகளவில் கோதுமை உள்ளிட்ட தானியங்களுக்குப் பற்றாக்குறை நிலவுகிறது.
இந்த நிலையில், உலகச் சந்தைகளில் இந்தியாவின் ஏற்றுமதியை அதிகரிக்க அண்மையில் இந்தியா இலக்கு நிர்ணயித்தது.
அதற்காக பல உலக நாடுகளுடன் பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டது. இந்தியாவிடம் இருந்து கோதுமை இறக்குமதி செய்ய எகிப்து ஒப்புதல் தெரிவித்திருந்தது.
இருப்பினும், இந்தியாவில் 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் கோதுமையின் விலை அதிகரித்த நிலையில், இதனைக் கட்டுப்படுத்த கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அரசு உடனடி தடை விதித்துள்ளது.
இந்தியாவில் தனியார் நிறுவனங்கள் அதிக விலைக்குக் கோதுமையை வாங்குவதால், விவசாயிகள் அரசு கொள்முதலுக்குக் கோதுமை தருவதைக் குறைத்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இருப்பினும், மே 13 ஆம் தேதிக்கு முன்னதாக கோதுமை ஏற்றுமதி ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தால், அவற்றிற்கும், கோதுமை தேவை என கோரிக்கை விடுக்கும் நாடுகளுக்கும் மட்டும் ஏற்றுமதி செய்யப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்திய அரசின் இந்த நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம், "அரசு போதுமான அளவு கோதுமையைக் கொள்முதல் செய்ய தவறியதே இந்த நிலைக்குக் காரணம் என்று நினைக்கிறேன்.
"சரியான அளவில் கொள்முதல் நடந்திருந்தால், கோதுமை ஏற்றுமதியைத் தடை செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது.
இது விவசாயிகளுக்கு எதிரான நடவடிக்கை. அதிக ஏற்றுமதி விலையின் பயன்கள் விவசாயிகளுக்கு கிடைக்காமல் போய்விடுகிறது. இந்த அரசு விவசாயிகளிடம் ஒருபோதும் நட்புடன் இருந்ததில்லை," என்றார்.