புதுடெல்லி: இந்தியாவின் அதிபர் தேர்தலுக்கான வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு இருக்கும் திரௌபதி முர்மு நாளை மறுதினமும் யஷ்வந்த் சின்ஹா திங்கட்கிழமையும் வேட்பு மனுவைத் தாக்கல் செய்கிறார்கள்.
அதிபர் தேர்தலில் 13 எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா அறிவிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக ஒடிசாவைச் சேர்ந்த பழங்குடி இனப் பெண்ணான திரெளபதி முர்மு செவ்வாய்க்
கிழமை இரவு அறிவிக்கப்பட்டார்.
அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களில் திரெளபதி முர்முவுக்கு 'இசட் பிளஸ்' பாதுகாப்பு கொடுத்தது மத்திய அரசு.
இந்நிலையில், நேற்றுக் காலை ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள தமது சொந்த ஊரான ராய்ரங்பூரில் உள்ள சிவாலயத்துக்குச் சென்றார் திரெளபதி முர்மு.
அங்கு அந்த ஆலயத்தைக் கூட்டி சுத்தம் செய்தார். பின்னர் கைகளைக் கழுவிவிட்டு அங்கிருந்த நந்தியை ஆரத்தழுவி வழிபாடு நடத்தினார். தொடர்ந்து, ஜகந்நாதர், அனுமன் ஆலயங்களுக்கும் திரெளபதி முர்மு சென்று வழிபாடு நடத்தினார். ராய்ரங்பூரில் உள்ள பிரம்மகுமாரிகள் இல்லத்துக்குச் சென்ற அவருக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.
இந்திய அதிபர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் அடுத்த மாதத்துடன் நிறைவடைகிறது.
அதனால் ஜூலை 18ஆம் தேதி நாட்டின் 16வது அதிபரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் நடை
பெறும் என தேர்தல் ஆணையம் கடந்த 9ஆம் தேதி அறிவித்தது.
அந்த அறிவிப்பைத் தொடர்ந்து வேட்பாளரைத் தேர்வு செய்வதற்கான பணியில் ஆளும் பாஜகவும் காங்கிரஸ், திரிணாமூல் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் முழுமூச்சாக இறங்கின.
அதன் விளைவாக முன்னாள் மத்திய அமைச்சரும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான யஷ்வந்த் சின்ஹா எதிர்க்கட்சிகள் சார்பில் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து பாஜக கூட்டணி வேட்பாளராக ஜார்க்கண்ட் மாநில முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டு உள்ளார்.
இவர் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், இந்தியாவின் முதல் பழங்குடியின அதிபர் மற்றும் இரண்டாவது பெண் அதிபர் என்ற சிறப்புகளைப் பெறுவார். முதல் பெண் அதிபர் பிரதிபா பாட்டீல்.
தவிர, ஒடிசாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் முதல் அதிபர் என்ற பெருமையும் திரௌபதி முர்முக்கு கிடைக்கும்.
பாஜக கூட்டணி வேட்பாளருக்கு உடனடியாக 'இசட் பிளஸ்' பாதுகாப்பு