இடாநகர்: தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவு காரணமாக, உத்தரகண்ட் மாநிலத்தில் ருத்ரபிரயாக் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
அண்மைய சில தினங்களாக அம்மாநிலத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. பெரும்பாலான நீர் நிலைகள் நிரம்பியுள்ள நிலையில், ஆங்காங்கே நிலச்சரிவுகளும் ஏற்பட்டு வருகின்றன. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நிலச்சரிவில் சிக்கி ஏராளமான வீடுகள் புதைந்துவிட்டன என்றும் மக்கள் மத்தியில் அச்சம் நிலவுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, ருத்ரபிரயாக் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் அங்குள்ள தர்சாலி கிராமம் பாதிக்கப்பட்டுள்ளது.
பெரிய அளவிலான பாறைகள் உருண்டு விழுந்ததால் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது. நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் பாதுகாப்பாக ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
அங்கு பாதிக்கப்பட்ட பகுதியில் தற்போது சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மிக விரைவில் போக்குவரத்து இயல்பு நிலைக்குத் திரும்பும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.