திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தின் திருவனந்தபுரத்தில் உள்ள கன்னியாபுரத்தில் வீட்டுக்கு வெளியே விஷ்ணு என்பவர், தன் மனைவியுடன் காரசாரமாகப் பேசிக்கொண்டிருந்தார். பின்னர் இருவரும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது கணவனுக்கு ஆத்திரம் கண்ணை மறைக்க, மனைவியின் இடுப்பில் இருந்த மூன்று மாதக் குழந்தையைப் பிடுங்கித் தரையில் வீசி எறிந்தார். தரையில் விழுந்த குழந்தை வீறிட்டு அலறியது.
இந்தக் கொடுமையான காட்சியை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் காவல்துறைக்குத் தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை அதிகாரிகள் குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். விஷ்ணுவைக் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், சம்பவத்தன்று விஷ்ணு மது அருந்தியிருந்தது தெரியவந்துள்ளது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைக்குக் கடுமையான காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.