புதுடெல்லி: காலிஸ்தான் போராளியான குர்பத்வந்த் சிங் பன்னூன், இந்தியாவின் ஏர் இந்தியா விமானத்தை குண்டுவைத்துத் தகர்க்கப்போவதாகக் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள காணொளியில் நவம்பர் 19ஆம் தேதிக்குப் பிறகு, சீக்கியர்கள் யாரும் ஏர்-இந்தியா விமானத்தில் செல்ல வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். அவரது அந்தக் காணொளி சமூக ஊடகத்தில் பரவி வருகிறது.
இந்தியாவால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ளார் குர்பத்வந்த் சிங் பன்னூன். அவர் சீக்கியர்களுக்கான நீதி என்ற (எஸ்எஃப்ஜெ) அமைப்பின் நிறுவனராவார். இந்தியாவில் காலிஸ்தான் கோரும் அமைப்புகள் யாவும் தடை செய்யப்பட்டுள்ளன. அதுபோல் குர்பத்வந்த் சிங்கின் அமைப்பும் தடை செய்யப்பட்டுள்ளது.
அந்தக் காணொளியில், “நவம்பர் 19ஆம் தேதிக்குப் பின்னர் சீக்கியர்கள் ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்ய வேண்டாம். உங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம். நவம்பர் 19ஆம் தேதி உலகப் பயங்கரவாதக் கிண்ணத்தின் இறுதிப் போட்டி நடைபெறுகிறது. அதன்பின்னர் பெரிய மாற்றங்கள் நிகழும் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார். அவர் பயங்கரவாதக் கிண்ணம் என்று குறிப்பிட்டிருப்பது உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டி என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் குர்பத்வந்தின் இந்தக் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவுவதைத் தொடர்ந்து, அவர் கனடா எல்லைக்குள் நுழைவதைத் தடை செய்யவேண்டும் என்று கனடாவில் உள்ள இந்து அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர்கள், கனடா குடிநுழைவுத்துறை அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கனடா அமைச்சர் மார்க் மில்லருக்கு வழக்கறிஞர்கள் எழுதியிருக்கும் கடிதத்தில், “குர்பத்வந்தின் பேச்சு இந்துச் சமூகத்தினரிடம் மட்டும் இல்லாமல் கனடா நாட்டு மக்களிடமும் துயரத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது” என்று தெரிவித்துள்ளனர்.