இரண்டு ஆண்டுகளாக கறுப்பு எறும்புகளின் தொல்லைக்கு ஆளாகியது, ஒரு குடும்பம்.
இந்தியாவின் மத்தியப் பிரதேசத்திலுள்ள ஜபல்பூரில் அமைந்த ஷாபுரா கிராமத்தில் ஆடவர் ஒருவரது வீட்டுக்குள் எறும்புகள் ஊடுருவிவிட்டன.
ஆடவர், அவரின் மனைவி, 9 மற்றும் 7 வயதில் இருக்கும் பிள்ளைகள் இதனால் பெரிதும் பாதிப்படைந்தனர்.
பிள்ளைகள் எறும்புக்கடிக்கும் ஆளாகினர்.
எறும்புகளை வீட்டை விட்டு விரட்ட ஆடவர் எண்ணற்ற முயற்சிகளில் இறங்கியும் எதுவும் பலனளிக்கவில்லை.
மேலும், அந்தக் கிராமத்தில் ஆடவரின் வீட்டில் மட்டுமே எறும்புகள் குடிபுகுந்தன. நாளுக்கு நாள் எறும்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்தது.
இறுதியாக, பல ஆண்டுகளாக வியர்வை சிந்தி கட்டிய அந்தச் சிறு மண்வீட்டைக் கோடரியால் இடித்துத் தள்ளத் தொடங்கினார் ஆடவர்.
சில மணிநேரத்தில் அந்த வீடே தரைமட்டமாகியது.
எறும்பு பிரச்சினை தீர்ந்தது. ஆனால், புது பிரச்சினை உதயமானது. அந்தக் குடும்பத்துக்கு இப்போது வீடில்லை.