பெங்களூரு: கர்நாடக மாநிலம் ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த சந்தேக நபரை தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
ஷபீர் என்று அடையாளம் காணப்பட்டுள்ள அந்த ஆடவர் பெல்லாரியில் புதன்கிழமை காலை கைது செய்யப்பட்டார்.
ராமேஸ்வரம் கஃபேவில் குண்டு வெடிப்புச் சம்பவம் நடப்பதற்கு முன்பாக கேமராவில் பதிவான நபரின் நெருங்கிய கூட்டாளி ஷபீர் என்று நம்பப்படுவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
பெங்களூருவில் ஒயிட் ஃபீல்ட் அருகில் செயல்பட்டுவந்த ‘ராமேஸ்வரம் கஃபே’ என்ற பிரபல உணவகத்தில் மார்ச் 1ஆம் தேதி சக்தி குறைந்த குண்டு வெடித்தது.
இதில் காயமடைந்த 10 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் குறித்து பெங்களூரு காவல்துறையினர் 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். எட்டு தனிப்படைகள் அமைத்திருந்தனர்.
இந்த நிலையில், இந்த வழக்கு மார்ச் 3ஆம் தேதி தேசிய புலனாய்வு அமைப்புக்கு (ஐஎன்ஏ) மாற்றப்பட்டது.
மார்ச் 1ஆம் தேதி பெங்களூரு மாநகரப் பேருந்து மற்றும் தும்கூருவுக்கு அரசுப் பேருந்தில் குற்றவாளி பயணம் செய்த சிசிடிவி காணொளி கிடைத்தது.
அதில் அவர் தொப்பி, முகக் கவசம் அணியாமல் மிகச் சாதாரணமாக இருப்பது தெரிகிறது.
இதேபோல அவர் மார்ச் 5ஆம் தேதி இரவு பெல்லாரி பேருந்து நிலையம் அருகே நடந்து செல்வது போன்ற காணொளியும் தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரிகளுக்கு கிடைத்தது.
இந்த மூன்று காணொளிகளிலும் குற்றவாளி அடிக்கடி சட்டை, பேண்ட் ஆகியவற்றை மாற்றி இருப்பதும் தெரியவந்துள்ளது.
இந்த வழக்கில் சந்தேகிக்கப்படும் நபரைக் கண்டுபிடிக்க புலனாய்வு அமைப்பு பொதுமக்களின் உதவியை நாடியது.
சந்தேகத்துக்குரியவர் உணவகத்தில் இருக்கும் காணொளி ஆதாரம் கிடைத்த நிலையில், அந்த ஆடவர் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.10 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, புதிய திருப்புமுனையாக தேசிய புலனாய்வு அமைப்பு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புள்ள முக்கிய சந்தேக நபர் யாரையும் தான் கைது செய்யவில்லை என்று புதன்கிழமை மாலை அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
உணவகம் மீண்டும் திறப்பு
இதற்கிடையில், பெங்களூருவில் குண்டு வெடித்த ராமேஸ்வரம் கஃபே உணவகம் எட்டு நாள்களுக்கு பிறகு மார்ச் 9ஆம் தேதி மீண்டும் பலத்த பாதுகாப்புடன் திறக்கப்பட்டது.