பெங்களூரு: பெங்களூருவில் உள்ள ‘ராமேஸ்வரம் கஃபே’ உணவகத்தில் கடந்த மார்ச் 1ஆம் தேதி குண்டுவெடித்தது. இதில் 10 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு காவல்துறையுடன் இணைந்து தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
சந்தேகிக்கப்படும் ஆடவர் உணவகத்தில் இருக்கும் காணொளி ஆதாரம் கிடைத்துள்ள நிலையில், சந்தேக நபர் குறித்த தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மார்ச் 1ஆம் தேதி சந்தேக நபர் பெங்களூரு மாநகர பேருந்து மற்றும் அரசு பேருந்தில் தும்கூருவுக்கு பயணம் செய்த காணொளி ஒன்று கிடைத்துள்ளது.
அதில் சந்தேக நபர் தொப்பி, முகக்கவசம் அணியாமல் மிக சாதாரணமாக இருப்பது தெரிகிறது. அதேபோல் அவர் மார்ச் 5ஆம் தேதி இரவு பெல்லாரி பேருந்து நிலையம் அருகே நடந்து செல்வது போன்ற காணொளி ஒன்றை தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகளுக்கு கிடைத்துள்ளது. இந்த மூன்று காணொளிகளிலும் சந்தேக நபர் அடிக்கடி தமது உடைகளை மாற்றி இருப்பதும் தெரியவந்துள்ளது.
இந்தக் காணொளிகளை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ள தேசியப் புலனாய்வு முகமை, ‘‘சந்தேகிக்கப்படும் குற்றவாளியைப் பிடிக்க பொதுமக்களின் உதவி தேவைப்படுகிறது. குற்றவாளி குறித்த தகவல் கிடைத்தால் 080 29510900, 8904241100 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளுங்கள்” என கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த வழக்கில் பெல்லாரி மாவட்டத்தில் துணி வியாபாரம் செய்யும் ஒருவரை வெள்ளிக்கிழமை அன்று அதிகாரிகள் கைது செய்தனர். இதேபோல பெங்களூருவில் மினாஸ், ஷயீத் சமீல், அனஷ்த் இக்பால், ஷா ரஹ்மான் ஆகிய 4 பேரை கைது செய்தனர். இந்த 5 பேரையும் அதிகாரிகள் 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
குண்டு வெடித்த 8 நாட்களுக்குப் பிறகு சனிக்கிழமை அன்று மீண்டும் பலத்த பாதுகாப்புடன் ‘ராமேஸ்வரம் கஃபே’ உணவகம் திறக்கப்பட்டது.