ஹைதராபாத்: மிக முக்கிய பிரபலங்களின் வருகை, பொதுக்கூட்டங்கள் நடக்கும் தருணங்களில் ஆளில்லா வானூர்திகள் பறப்பதற்கு தடை விதிக்கப்படும். ஆனால், இந்த விதிமுறைகளையும் மீறும் வகையில் ஒரு சில தருணங்களில் வானூர்திகள் வானில் பறக்கவிடப்படும்.
இந்த அச்சுறுத்தலைக் கழுகுகள் மூலம் சமாளிப்பதற்கான வழிமுறைகளைக் கண்டறிந்துள்ளனர் தெலுங்கானா காவலர்கள்.
விதிமுறைகளுக்கு எதிராகப் பறக்கும் ஆளில்லா வானூர்திகளை முறியடிக்க பயிற்சி பெற்ற கழுகுகளைப் பயன்படுத்தும் முறை நெதர்லாந்து, பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளில் பின்பற்றப்படுகிறது.
இந்நிலையில், இந்த முறையை தெலுங்கானா மாநிலக் காவலர்களும் முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு, கடந்த சில ஆண்டுகளாக மூன்று கழுகுகளுக்குப் பயிற்சி அளித்து வருகின்றனர்.
இந்தக் கழுகுகள் வானில் பறக்கும் ஆளில்லா வானூர்திகளை இடைமறித்து அவற்றை செயலிழக்கச் செய்யும்.
ஹைதராபாத்தின் புறநகர்ப் பகுதியில் உள்ள மொய்னாபாத்தின் ஒருங்கிணைந்த புலனாய்வு பயிற்சி அகாடமியில் (ஐஐடிஏ) காவல்துறை இயக்குநர் ஜெனரல் ரவி குப்தா, மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளிட்டோர் அண்மையில் ஒத்திகை நடத்தினர்.
அதில், பயிற்சி பெற்ற கழுகுகள் ஆளில்லா வானூர்திகளை திறம்பட வீழ்த்தின.
இந்தியாவில் ஆளில்லா வானூர்திகளை வீழ்த்த காவல்துறை இதுபோன்ற வழிமுறைகளைப் பின்பற்றுவது இதுவே முதல்முறை எனக் கூறப்படுகிறது.
இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் ஆளில்லா வான்வழி விமானங்கள், ஆளில்லா வானூர்திகள் மூலம் ஆயுதங்கள், வெடிமருந்துகள், போதைப்பொருள்களைக் கடத்தும் சம்பவங்கள் கடந்த 2021 முதல் இரு மடங்காக அதிகரித்துள்ளதாக எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) தெரிவித்துள்ளது.
இந்தச்சூழலில் தெலுங்கானா மாநிலக் காவல்துறை எதிரிகளின் ஆளில்லா வானூர்திகளை வீழ்த்த கழுகளுக்குப் பயிற்சி அளித்து வருவது பாராட்டுகளைப் பெற்றுள்ளது.