பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா மனைவியின் திருடுபோன கார் இருபது நாள்களுக்குப் பிறகு மீட்கப்பட்டுள்ளது.
தெற்கு டெல்லியில் உள்ள கார் பழுதுபார்ப்பு சேவை நிலையத்தில் நட்டாவின் மனைவி பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்த ‘டொயோட்டா ஃபார்ச்சூனர்’ கார் பழுதுபார்ப்புக்காக விடப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து, நட்டா மனைவியின் ஓட்டுநர் ஜோகிந்தர் அந்தக் காரைத் தனது வீட்டுக்கு எடுத்துச் சென்றார். அப்போது அந்த கார் திருடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
அதனை அடுத்து, தெற்கு டெல்லி காவல் நிலையத்தில் அது குறித்து புகார் செய்யப்பட்டது. வழக்கைப் பதிவுசெய்த காவல்துறையினர் காரைத் தேடும் பணியில் இறங்கினர்.
திருடப்பட்ட கார் குருகிராம் நோக்கிச் சென்றதாகவும், அது இமாச்சலப் பிரதேச வாகன உரிம எண்ணைக் கொண்டிருந்ததாகவும், கண்காணிப்புக் கருவிகள் மூலம் தெரியவந்தது.
இந்நிலையில் திருடப்பட்ட கார் இருபது நாள்களுக்குப் பிறகு, உத்திரப் பிரதேசத்தின் வாரணாசியில் கண்டுபிடிக்கப்பட்டது.
அதன் தொடர்பில் காவல்துறையினர் இருவரைக் கைதுசெய்துள்ளனர். விசாரணையில் திருடப்பட்ட காரை அவர்கள் நாகாலாந்துக்குக் கொண்டுசெல்ல திட்டமிட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.