வயிற்றுப் பசியை அடக்க, உணவை உண்கிறோம். ஆனால், உணவு உண்ட பின்னும் பசி அடங்காது. அதுவும், இனிப்பாக ஏதாவது சாப்பிடவேண்டும் என்று ஆசை வரும். இதன் காரணமாக, மதிய உணவும் இரவு உணவும் உண்ட பிறகு, நம்மில் பலர் இனிப்பு வகைகளைச் சாப்பிட்டு விடுகிறோம்.
இதனால் காத்திருக்கும் பின் விளைவுகள் என்னவென்று தெரியாமலேயே, இனிப்பு வகை
களைப் பாரபட்சமின்றி உண்டு இன்பம் காண்கிறோம். இந்தியாவின், மும்பையைச் சேர்ந்த பிரபல உணவியல் நிபுணரான நைனி செடல்வாட், உணவு உண்ட பிறகு, இனிப்பு சாப்பிடுவது ஒரு தவறான பழக்கம் என்று கூறுகிறார். உணவு உண்டதுமே, இனிப்பு சாப்பிடுவதால், உடம்பில் இருக்கும் ஒட்டுமொத்த சர்க்கரை அளவு அதி
கரிப்பதுமன்றி, காலப்போக்கில், அது உடல் பருமனை உண்டாக்குவதற்கும், இதர நோய்கள் வருவதற்கும் வழிவகுக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவு அதிகமானால், ஒருவரின் நோயெதிர்ப்புச் சக்தி குறையும் என்றும் இதய, சிறுநீர் கோளாறுகள் வருவதற்கும் வாய்ப்புகள் கூடும் என்றும் குறிப்பிட்டார். சாப்பிட்ட பின் ‘டிசர்ட்’ சாப்பிடாமல், வேறு எப்பொழுதுதான் சாப்பிட முடியும் என தலையைப் பிய்க்கும் கேள்வி நமக்குள் எழும். இனிப்பு சாப்பிடுவதையே தவிர்க்க வேண்டும் என்று கூறுகிறார் தெமாசெக்
பலதுறைத் தொழிற்கல்லூரியின் கிளைசெமிக் குறியீட்டு ஆராய்ச்சிப் பிரிவின் தலைவரான டாக்டர் கல்பனா பாஸ்கரன்.
உணவியல் நிபுணராகவும் இருக்கும் இவர், ஒருவர் சாப்பிட்ட பிறகு, இனிப்பாக ஏதாவது ஒன்றைச் சாப்பிட வேண்டுமென்று தோன்றுவது இயல்புதான் என்றார். ‘தி ரிஜல் சென்டர்’ எனும் இணையப்பக்கத்தில் மனித உடலில் இருக்கும் லெப்டின் எனும் ஒரு சுரப்பி நீரின் அளவு குறைந்தால், அது ஒருவரை அதிகம் சாப்பிடத் தூண்டும் என குறிப்பிட்டிருந்தது. அவ்வாறு, டாக்டர் கல்பனா விளக்கமளித்த போது, லெப்டின் போலவே, செரோட்டோனின் எனும் வேறொரு சுரப்பி நீரும் செயல்படுகிறது என்று கூறினார்.
பெரும்பாலும் உடல் பருமனானவர்களுக்கு அதிக இனிப்பு சாப்பிடத் தோன்றும் என்றாலும் ஆரோக்கியமான உடல் எடை கொண்டோரும் அதிக மாவுச் சத்து அளவு கொண்ட உணவை உட்கொண்டால், இந்த சிக்கல் நிலவும் என்று கூறினார் டாக்டர் கல்பனா. இனிப்பு வகைகளுக்குப் பதிலாக, சாப்பிட்ட பின்னர் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்ட பழங்களைச் சாப்பிட்டால், பழம் அதிக இனிப்பாக சுவைப்பதோடு, ஆரோக்கியம் மிகுந்த இனிப்பு சாப்பிட்ட உணர்வு கிடைக்கும் என்று பரிந்துரைத்தார் டாக்டர் கல்பனா.
இதுவும் முடியாமல் போனால், சாப்பிட்ட உடனே ஒருவர் பல் துலக்கினால், ஒருவருக்கு அதற்கு பின் எதுவும் சாப்பிடக் கூடாது என்றொரு மனப்போக்கு வந்துவிடும். அதன் காரணமாக, இனிப்பு மட்டுமன்றி, பிற உணவு வகைகளையும் சாப்பிடாமல் நாவைக்
கட்டுப்படுத்த முடியும்.