கொரோனாவில் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உயிர்பிழைத்தவரின் அனுபவம்
கொரோனா கிருமித்தொற்றினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் ஒரு வாரத்துக்கு மேலாக அனுமதிக்கப்பட்டு அந்நோயுடன் போராடி மீண்டவர்களுள் 52 வயது சதீஷ் குமாரும் ஒருவர்.
நோய்வாய்ப்பட்டிருந்த தாயாரைக் காண இந்தியாவுக்குச் சென்று மே 6ஆம் தேதி சிங்கப்பூர் திரும்பியபோது நிரந்தரவாசி யான சதீஷ் குமாருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது. உடனடியாக அவர் தேசிய தொற்றுநோய் சிகிச்சை நிலையத்தில் (என்சிஐடி) அனுமதிக்கப்பட்டார்.
தொடக்கத்தில் காய்ச்சல், இருமல், தொண்டை வலி போன்ற சாதாரண பிரச்சினைகளே இருந்தன. ஆனால், சில நாட்களிலேயே மூச்சு வாங்க முடியாத அளவிற்கு நிலைமை மோசமாகி, அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறவேண்டிய சூழல் நேரிட்டது.
“முதல் சில நாட்களில் நினைவில்லாமல் இருந்தேன். நினைவு திரும்பிய பின்னரும் வாய் வழியாக குழாய் மூலம் ஆக்சிஜனை சுவாசிக்கும் நிலைமை. தொண்டையில் மிகுந்த வலியும் உறுத்தலும் ஏற்பட்டது. வாயிலிருந்து எந்த சத்தமும் வராது, எதுவும் சொல்ல முடியாது. தவறுதலாக கையை நகர்த்திவிடக்கூடாது என்று கைகளைக் கட்டி வைத்திருந்தார்கள். நினைவு வந்த பிறகும் மூன்று நாட்களுக்கு இப்படி அசையாமல் படுக்கையிலேயே இருக்க வேண்டியிருந்தது மிகவும் சிரமமாக இருந்தது,” என்று நோய்வாய்ப்பட்டிருந்த நாட்களை நினைவுகூர்ந்தார் சதீஷ்.
பொறியியலாளராகப் பணியாற்றும் திரு சதீஷுக்கு நீரிழிவு நோய் தவிர்த்து, வேறு உடல்நல பிரச்சினைகள் எதுவும் இல்லை.
ஏறக்குறைய ஒன்றரை மாத காலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ஜூன் மாதம் 9ஆம் தேதி மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார். “மருத்துவர்கள், தாதியர்கள், உடலியக்கப் பயிற்சி சிகிச்சையாளர்கள் அனைவரது உதவியும் ஆதரவும் இல்லாமல் இந்தக் கொடிய நோயிலிருந்து மீண்டிருப்பது சிரமம். இந்தப் புதிய வாழ்க்கை எனக்கு கிடைத்திருக்காது,” என்றார் சதீஷ்.
கிருமித்தொற்றிலிருந்து குணமடைந்துவிட்டாலும், அவரது உடலியக்கம் முன்பிருந்தது போல இல்லை. நீண்ட தூரம் நடப்பது போன்ற சில அன்றாட நடவடிக்கைகளைச் செய் வதற்கும் அவருக்கு சற்று சிரமமாக உள்ளது. உடலை வலுவாக்க மூன்று வாரங்களுக்கு ஒருமுறை உடலியக்கப் பயிற்சி சிகிச்சைக்கு (physiotherapy) டான் டோக் செங் மருத்துவமனைக்கு செல்கிறார்.
அடிக்கடி உடற்பயிற்சி செய்வது, ஆரோக்கியமான உணவு சாப்பிடுவது என்று சுகாதாரத்தை முன்னிலைப்படுத்தி வாழ்க்கையை மாற்றியுள்ளார் சதீஷ்.
“தகுந்த உணவும், உடற்பயிற்சியுமே உடலை மீண்டும் வலுவாக்கும் என்பதை அனுபவத்தில் நான் உணர்ந்துள்ளேன்,” என்றார் அவர்.
மருத்துவக் குழுவின் ஆலோசனை
தேசிய தொற்றுநோய் சிகிச்சை நிலையத்தில் பணியாற்றும் நுரையீரல், உடலியக்கப் பயிற்சி சிகிச்சையாளர்கள் 400க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகளை பராமரித்துள்ளனர் என்றார் டான் டோக் செங் மருத்துவமனையின் மூத்த உடலியக்கப் பயிற்சி சிகிச்சையாளர் ஆடரி லீ.
“உடலியக்க சிகிச்சை ஒவ்வொருவரது தனிப்பட்ட தேவையையும் பொறுத்தது. உடல் நலமாக உள்ளவர்களுக்கு நீண்டகால உடலியக்க சிகிச்சை தேவைப்படாது. ஒருவரது நோய் அறிகுறிகளைப் பொறுத்தும் உடல்நிலையைப் பொறுத்தும் பயிற்சிகள் சொல்லித்தரப்படுகின்றன. ஒவ்வொருவரது நோய் அறிகுறியும் வேறுபட்டிருக்கும்,” என்றார் ஆடரி.
மோசமான அளவில் கிருமி தாக்கும்போது நுரையீரலுக்கு வீக்கத்தையும் பாதிப்பையும் அது உண்டாக்கலாம் என்றும் இவ்வாறு பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு விரைவாகவே உடலியக்கப் பயிற்சி வழங்குவது முக்கியம் என்றும் சொன்னார் ஆடரி.
“கொவிட் கிருமித்தொற்று நேரடியாக நுரையீரலைப் பாதிக்கிறது. அது உடம்பிற்கு வேறு தகவல் குறிப்புகள் அனுப்பினால் மற்ற உடல் உறுப்புகளும் பாதிக்கப்படலாம். இதயம், சிறுநீரகம், தசை முதலியவை பாதிக்கப்படலாம். பொதுவாக வலி, தசை இறுக்கம் போன்றவை ஏற்படலாம்,” என்றார் டான் டோக் செங் மருத்துவமனையில் சுவாசக்குழாய் மற்றும் உயிர்காப்புப் பராமரிப்பு மருத்துவ ஆலோசகர் டாக்டர் புவா சர் ஹோன்.