கொவிட்-19 கிருமி வெளிநாட்டு ஊழியர் களின் தங்குவிடுதிகளில் தீ போல் பரவிய நேரம். 2020ஆம் ஆண்டின் முதல் சில மாதங்களில் சிங்கப்பூர் கொரோனா கிருமிப் பரவலுக்கு எதிராக எழுப்பிய கோட்டை தங்குவிடுதிகளில் ஆட்டம் கண்டது.
சிங்கப்பூரில் கிருமி பாதிப்பின்போது நாடு எதிர்கொண்ட சவால்களை நினைவுகூரும் புதிய நூலில் சிங்கப்பூர் அரசாங்கம் வெளிநாட்டு ஊழியர்களைக் காத்த கதையும் இடம்பெற்றுள்ளது.
'இன் திஸ் டுகெதர்: சிங்கப்பூர்'ஸ் கொவிட்-19 ஸ்டோரி' எனும் தலைப்பிலான அந்த நூல் கடந்த வியாழக்கிழமை 20ஆம் தேதி அந்நூல் வெளியிடப்பட்டது.
ஊழியர் தங்குவிடுதிகளில் ஏற்பட்ட கிருமிப் பரவலைக் கட்டுக்குள் கொண்டுவரவும் நாட்டின் மருத்துவக் கட்டமைப்பு நிலை தடுமாறாமல் இருக்கவும் அரசாங்கம் எடுத்த பெருமுயற்சியும் நூலில் இடம்பெற்றுள்ள அத்தகைய சில சவால்களாகும்.
கடந்த ஆண்டு ஊழியர் தங்குவிடுதிகளில் கிருமிப் பரவல் தலை விரித்தாடியது. 2020 ஏப்ரலில் விடுதிகளில் வெறும் 31 ஆக இருந்த தொற்று எண்ணிக்கை மே மாதத்தில் 15,000ஐத் தாண்டியது. அடுத்து ஜூன் மாதத்தில் அந்த எண்ணிக்கை இரட்டிப்பாகி 33,000 ஆனது.
2020ஆம் ஆண்டின் பெரும்பகுதியில் 20 தொற்றுச் சம்பவங்களில் 19, ஊழியர் தங்குவிடுதிகளிலேயே நிகழ்ந்தன. கடந்த ஆண்டு முடிவதற்குள், விடுதிகளில் தங்கிய 323,000 ஊழியர்களில் 175,000 பேரைக் கிருமி தொற்றிச் சென்றது.
ஊழியர் தங்குவிடுதிகளில் நிலவிய சூழல், மிகப் பெரும் பேரிடராக மாறும் எல்லா சாத்தியமும் இருந்தது என்று 'இன் திஸ் டுகெதர்: சிங்கப்பூர்'ஸ் கொவிட்-19 ஸ்டோரி' நூலில் வருணித்தார் பிரதமர் லீ.
"ஊழியர் தங்குவிடுதிகள் குறித்து எங்களுக்கு கவலை இருந்தது. அவர்கள் ஆபத்தான நிலையில் இருந்தனர் என்பது எங்களுக்குத் தெரியும். (2020) ஜனவரியிலிருந்தே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தொடங்கிவிட்டோம். ஆனால் அவை போதுமானதாக இல்லை," என்றார் திரு லீ.
தங்குவிடுதி அறைகளில் சாதாரணமாக 12 முதல் 16 ஊழியர்கள் இரண்டு அடுக்குக் கட்டில்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். ஒவ்வொரு விடுதியும் பல்லாயிரம் ஊழியர்கள் கூடிவாழும் இடம்.
கூட்டமும் சுகாதாரமற்ற சூழலும் நிறைந்த விடுதிகளில் தொற்றுக் குழுமங்கள் உருவாகும் என்று ஆர்வலர் அமைப்புகள் எச்சரித்திருந்தன. அந்த எச்சரிக்கை உண்மையானது.
மார்ச் கடைசியில் ஊழியர் தங்குவிடுதிகளில் தொற்றுக் குழுமங்கள் உருவாகத் தொடங்கியதை நூல் விவரிக்கிறது.
பரவலைத் தடுத்து ஊழியர்களைப் பாதுகாப்பதற்காக சிங்கப்பூர் ஆயுதப் படைகள், சுகாதார, மனிதவள அமைச்சுகள், உள்துறை அமைச்சின் உள்துறைக் குழு ஆகியவை அடங்கிய அனைத்து அமைப்புப் பணிக்குழு உருவாக்கப்பட்டது.
பிரதமர் லீ சியன் லூங் ஏப்ரல் 4ஆம் தேதி கேட்டுக்கொண்டதன்பேரில் மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன் குழுவுக்குத் தலைமை தாங்கினார்.
ஏப்ரல் 5ஆம் தேதி இரண்டு தங்குவிடுதிகள் முடக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டன. அதே நேரத்தில் ஊழியர்களின் நலனும் அடிப்படைத் தேவைகளும் பூர்த்தி செய்யப்பட்டன. அவ்வாறு செய்யவில்லை என்றால் பெரும் கட்டொழுங்குப் பிரச்சினை ஏற்பட்டிருக்கக்கூடும் என்றார் திரு டியோ.
மூன்று நாள்களில் நிலைமை கட்டுக் கடங்காமல் போனது. குறைந்தது 9 விடுதிகளில் தொற்றுக் குழுமங்கள் ஏற்பட்டன. சிங்கப்பூரில் உள்ள 43 தங்குவிடுதிகளிலும் மருத்துவ வசதிகளை அமைத்தது அனைத்து அமைப்புப் பணிக்குழு. உணவு, அத்தியாவசியப் பொருள்கள் உள்ளே கொண்டு செல்லப்பட்டன.
ஏப்ரல் நடுப்பகுதிக்குள் எல்லா தங்குவிடுதிகளும் தனிமைப்படுத்த வட்டாரங்கள் ஆயின. கொவிட்-19 தொற்று ஏற்பட்ட ஊழியர்கள் சமூக சிகிச்சை நிலையங்களுக்கு மாற்றப்பட்டனர். கிருமிப்பரிசோதனைகளும் தனிமைக் காப்பும் கடுமையாகக் கடைப்பிடிக்கப்பட்டன.
பொருத்தமற்ற உணவு, மோசமான வாழ்விடப் பிரச்சினை, ஊழியர் சம்பளம் போன்ற பிரச்சினைகள் படிப்படியாகத் தீர்க்கப்பட்டன. நான்கு மாதங்களுக்குப் பின்னர் ஊழியர் தங்குவிடுதிகளில் கொரோனா கிருமி ஒழிக்கப்பட்டது. அதன் பின்னர், கட்டுமானம், கடல்துறை ஆகியவற்றின் ஊழியர்கள் வேலைக்குத் திரும்பத் தொடங்கினர்.
ஊழியர் தங்குவிடுதி அனுபவம் தந்த பாடத்தை பிரதமர் லீ விவரித்தார்.
"நாம் இன்னும் விரைவாக தயார் செய்திருக்கவேண்டும். அப்படிச் செய்திருந்தால், விரைவாகவும் தேவையான எல்லாவற்றையும் தயாராக வைத்திருந்தும் விடுதிகளைத் தனிமைப்படுத்தியிருக்கலாம்," என்ற திரு லீ, "இனி தங்குவிடுதிகளை வேறு விதத்தில் கையாளவேண்டும்" என்று கூறினார்.