இணைய விளையாட்டுகளை சற்று ஒதுக்கிவிட்டு, நம் பிள்ளைகள் விளையாட்டுப் பொருள்களை பயன்படுத்த ஊக்குவிப்போம்.
பள்ளிப் பாடங்கள் தொடங்கி இரண்டு மாதங்கள்தான் ஆகியுள்ளன. எனவே, மாணவர்களுக்கு அவ்வளவு வீட்டுப்பாடமும் திட்டவேலையும் செய்ய வேண்டிய கட்டாயம் இருக்காது. பள்ளி முடிந்தவுடன் பிள்ளைகள் தங்கள் விளையாட்டு நேரத்தை தொடங்க ஆர்வமாக வீடு திரும்புகின்றனர்.
ஆனால், பெரும்பாலும் இப்பிள்ளைகள் இணைய விளையாட்டுகளையே விரும்புகின்றனர்.
"இதுபோன்ற பழக்கவழக்கங்கள் வருந்தத்தக்கதாக இருக்கலாம். குடும்ப உறுப்பினர்கள் ஒருவரை ஒருவர் பார்க்கும் நாட்களில் கூட பிள்ளைகள் தங்கள் இயந்திரக் கருவிகளை மும்முரமாக பயன்படுத்தி விளையாடிக்கொண்டிருப்பார்கள்," என்று வருத்தப்பட்டார் கொங் வா பள்ளி ஆசிரியர் திருவாட்டி ஷரிஃபா வர்டா.
இன்றைய தொடக்கப் பள்ளி மாணவர்கள் விளையாட்டுப் பொருள்களைக் கொண்டு விளையாடுவதில் ஈடுபாடு காட்டுவதில்லை.
தமது சிறு வயதில் 'ஃபோம் ஃபிக்ஸ் இட் ப்லேன்ஸ்' கொண்டு விளையாடினார் திருவாட்டி ஷரிஃபா. அது தமது கற்பனைத்திறனை வளர்த்ததாகக் கூறுகிறார். சிறுவர்கள் ஒன்றுசேர்ந்து விளையாட்டுப் பொருள்களைக் கொண்டு விளையாடும்போதும் பலகை விளையாட்டுகளை விளையாடும்போதும் குழுவாக விளையாட வாய்ப்புக் கிடைக்கிறது, அத்துடன் அவர்களுடைய புத்தாக்கத்திறனும் வளர்கிறது.
ஒரு சிலர், இணைய விளையாட்டுகளின் வாயிலாகவும் மேற்குறிப்பிட்ட திறன்களை வளர்த்துக்கொள்ளலாம் என்று கூறினாலும், வல்லுநர்களோ, விளையாட்டு பொருட்களைக் கொண்டு இன்னும் அதிகமாகவே கற்க வாய்ப்புகள் உள்ளன எனக் கூறுகிறார்கள்.
விளையாட்டுப் பொருள்களைக் கொண்டு விளையாடும் பிள்ளைகள் இன்னும் சுறுசுறுப்பாக இருப்பார்கள் என்றும் திரைகளைப் பார்த்துக்கொண்டே இருக்க மாட்டார்கள் என்றும் சொன்னார், ஆங்கர் கிரீன் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கொர்டன் சுவா கூன் லெங்.
ஆனால், தங்கள் விரல்களைக் கொண்டு இயந்திரக் கருவிகளை பயன்படுத்தி விளையாடும் சிறுவர்களுக்குக் குறைந்த அளவில்தான் பயன் உள்ளது என்றார் புக்கிட் பாஞ்சாங் தொடக்கப்பள்ளி ஆசிரியர் திருமதி ஃபில்லிஸ் லிம்.
சமமான நேரத்தை ஒதுக்கிக் கொடுங்கள்
கொவிட்-19 பரவும் காலக்கட்டத்தில் பிள்ளைகளிடையே இணைய விளையாட்டுகள் சூடுபிடித்தாலும், விளையாட்டுப் பொருள்களைத் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும்.
இணைய விளையாட்டு, விளையாட்டுப் பொருள்களுடனான விளையாட்டு ஆகிய இரண்டுக்கும் சமமான நேரத்தை ஒதுக்குவதற்கு பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு உதவலாம்.
பிள்ளைகளுக்கு பெற்றோர் முதலில் ஓர் அமைதியான, சுத்தமான இடத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர், அங்கு என்ன செய்ய விரும்புகிறார்கள், பிள்ளைகள் எவ்வித விளையாட்டுப் பொருளை எடுத்து விளையாட விரும்புகிறார்கள் என்றும் கேட்டுக்கொள்ளலாம். மேலும், பெற்றோர் தங்கள் பிள்ளைகளோடு ஒன்றுசேர்ந்து விளையாட ஆர்வம் காட்ட வேண்டும். அதே நேரத்தில், பிள்ளைகளிடம் சில சமயங்களில் கேள்வி கேட்க வேண்டும். பெற்றோர் தமது சொந்தக் கருத்துகளையும் பிள்ளைகளோடு பகிர்ந்துகொள்ள வேண்டும்.
கருவிகளைப் பயன்படுத்தும் நேரத்தைக் குறைத்துக்கொள்வதோடு, தினமும் விளையாட்டுப் பொருள்களைக் கொண்டு விளையாடும் பழக்கத்தை பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு அறிமுகப்படுத்தலாம். அதுமட்டுமல்லாமல், ஒரு சில நாட்களில் மற்ற பிள்ளைகளையும் வீட்டுக்கு அழைத்து விளையாட ஊக்குவிக்கலாம்.
இதன் மூலம், பிள்ளைகளிடையே புது நட்புகள் உருவாகி நீண்ட காலம் நீடிக்கலாம்.
பெற்றோர் தங்கள் பிள்ளைகளோடு விளையாடும்போது நல்ல உதாரணமாகத் திகழ, தங்கள் கைத்தொலைபேசிகளையும் மற்ற இயந்திரக் கருவிகளையும் பயன்படுத்தாமலிருக்க முயற்சி செய்ய வேண்டும். பிள்ளைகள் மீது முழு கவனத்தையும் செலுத்தினால் அவர்களும் மகிழ்ச்சியாக விளையாடுவார்கள்.
ஆசிரியர்கள் பரிந்துரைக்கும் விளையாட்டுப் பொருட்கள்
தொடக்கப்பள்ளி ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு மாணவர்கள், தங்கள் உடலை அசைய வைக்கும் விளையாட்டுப் பொருள்களைக் கொண்டு விளையாடலாம். மேலும், மனநல மற்றும் சமூகநல வளர்ச்சியை ஊக்குவிக்கும் விளையாட்டுப் பொருள்களைக் கொண்டும் விளையாடலாம். உதாரணத்திற்கு, 'புஷ் அண்ட் புல்' விளையாட்டுப் பொருள்கள், 'ரைட்-ஒன்' விளையாட்டுப் பொருள்கள், 'பில்டிங்க் பிளாக்ஸ்', அமைப்பு உருவாக்கும் விளையாட்டுப் பொருள்கள் போன்றவற்றை பிள்ளைகளுக்கு வாங்கலாம்.
தொடக்க நிலை நான்கு முதல் ஆறாம் வகுப்பு மாணவர்கள் 'மாடல்ஸ்' மற்றும் 'டென்கிராம்ஸ்' போன்ற சவால்களைச் சமாளிக்க கற்றுத்தரும் விளையாட்டுப் பொருள்களைக் கொண்டு விளையாடலாம். அறிவுக்கூர்மையையும் சிந்தனைத்திறனையும் தூண்டும் விளையாட்டுப் பொருள்களைப் பிள்ளைகளுக்குக் கொடுப்பது நல்லது. லெகோ, பிளாக்ஸ், தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு மிகவும் தகுந்த விளையாட்டுப் பொருள்களாக அமைகின்றன.
அவற்றைக் கொண்டு பிள்ளைகள் உருவாக்கும் வடிவங்களும் அவர்களின் புத்தாக்கத்தையும் சிந்தனைத் திறனையும் பிரதிபலிக்கும். இறுதியாக, கணிதம் மற்றும் அறிவியல் அறிவூட்டும் விளையாட்டுப் பொருள்கள் பிள்ளைகள் பள்ளியில் கற்ற பாடங்களைப் புரியவைக்க உதவுகின்றன.