கி.ஜனார்த்தனன்
சித்திரைப் புத்தாண்டு தினமான இன்று சிங்கப்பூரின் பல்வேறு ஆலயங்களிலும் சிறப்புப் பூஜைகள் நடைபெறவுள்ளன. ஆலய வழிபாட்டுத் தொடர்பிலான கொவிட்-19 கட்டுப்பாடுகளின் தளர்வு மார்ச் 24ஆம் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து பக்தர்களை அதிக எண்ணிக்கையில் வரவேற்க ஆலயம் காத்திருப்பதாகத் தெரிவித்தன.
காலையில் புத்தாண்டுக்கான சிறப்பு வழிபாடுகளும் மாலையின்போது பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்வு இடம்பெறும் என்று ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயத்தின் தலைவர் டாக்டர் எஸ். டி காசிநாதன் தெரிவித்தார்.
பக்தர்களின் திரளான வருகையை எதிர்பார்ப்பதாகக் கூறிய கேலாங் ஸ்ரீ சிவன் கோயிலின் செயலாளர் திரு கே கலையரசன் இனிப்புப் பிரசாதம் விநியோகிக்கப்படும் எனத் தெரிவித்தார். மாலை நேரத்தின்போது அங்கும் பஞ்சாங்கம் வாசிக்கப்படும்.
புத்தாண்டுக்காக பக்தர்களுக்கு பிரசாதம் கொடுக்கப்படுவதுடன் ஆலயத் தொண்டூழியர்களும் அன்பளிப்பு தரப்பட்டு கௌரவிக்கப்படுவர் என்று ஸ்ரீ மன்மத காருணீஸ்வரர் ஆலயத்தின் தலைவர் கூறினார்.
பழையபடி பிரம்மாண்டமாகக் கொண்டாடும் காலம் தொலைவில் இல்லை என்பதால் ஆலயத்தில் மகிழ்ச்சி நிலவுகிறது என்றார் மார்சிலிங் சிவ-கிருஷ்ணா ஆலயத்தின் செயலாளர் ராய் கோபிதான்.
இன்று குரு பெயர்ச்சியும் நிலவுவதால் ஆலயங்களில் சிறப்புப் பூஜைகள் நடைபெறுகின்றன. அனுகூலம் பெறும் ராசிகள் ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம் என்றும் இதர ராசிகள் பரிகாரங்களைச் செய்யவேண்டும் என்றும் புனித மரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் ஆலயத்தின் மூத்த புரோகிதர் ஸ்ரீ சோமசுந்தரம் குருக்கள் தெரிவித்தார். வீட்டில் பொங்கல் வைப்பதற்கு ஏற்ற நேரங்களை ஸ்ரீ மாரியம்மன் ஆலயம் வெளியிட்டுள்ளது இவை பின்வருமாறு: காலை 5.30 முதல் 7.00 மணி வரை, காலை 8.30 மணி முதல் 10.00 மணி வரை, பிற்பகல் 11.30 மணி முதல் 1 மணி வரை, மாலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை.