கி.ஜனார்த்தனன்
காற்சட்டை அணிந்த கட்டுமான ஊழியர்களுக்கு இடையே வெள்ளை வேட்டி சட்டை அணிந்திருந்த திரு சடாச்சரம் முருகன், முகமலர்ச்சியுடன் சித்திரைப் புத்தாண்டைக் கொண்டாடினார்.
கடந்த ஆண்டு சித்திரைப் புத்தாண்டின்போது தங்குவிடுதி அறையில் அடைபட்டிருந்த நிலை மாறி, இந்நாளில் சுதந்திரமாக வெளியே நடமாடி சாப்பிட முடிந்ததில் இவரைப் போன்ற வெளிநாட்டு ஊழியர்களின் முகங்களில் மகிழ்ச்சி மலர்ந்தது.
சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு, வெஸ்ட்லைட் மண்டாய் தங்குவிடுதியைச் சேர்ந்த ஊழியர்களுக்கு இந்து அறக்கட்டளை வாரியம் இனிப்பு, கார வகைகளை வழங்கியது. முறுக்கு, ஓமப்பொடி, லட்டு உள்ளிட்ட பலகாரங்களைக் கொண்ட 5,000 பைகள் கடந்த வியாழக்கிழமை வழங்கப்பட்டன. பண்டிகைகளின்போது இதுபோன்ற பலகார விநியோகம் ஊழியர் தங்குவிடுதிகளில் கடந்த ஈராண்டுகளாக நடைபெறுகிறது.
சித்திரைப் புத்தாண்டு தினத்தன்று காலையில் தங்குவிடுதி அறையில் சிலருடன் பொங்கல் வைத்த திரு சடாச்சரம், பின்னர் லிட்டில் இந்தியாவுக்குச் சென்று ஆலயத்தில் நிறைவாக தரிசனம் செய்தார். இதற்காக அவர் 'எஸ்ஜி வொர்க்பாஸ்' செயலி மூலம் முன்பதிவு செய்ய வேண்டி இருந்தது. முகத்தில் புன்னகை தவழ, விடுதிவாசிகள் சிலருடன் வட்டமாக அமர்ந்து பலகாரங்களைச் சுவைத்த திரு சடாச்சரம், "கடந்த ஆண்டில் இவற்றையெல்லாம் செய்ய முடியவில்லை," என்றார்.
இவருடன் அமர்ந்து பலகாரம் சாப்பிட்டார் தமிழகத்தின் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த திரு சின்னப்பிள்ளை முருகையன், 52. சிங்கப்பூரில் கையேடுகளிலும் அறிவிப்புப் பலகைகளிலும் தகவல்கள் தமிழிலும் இடம்பெறுவதால் தம்மைப் போன்ற ஊழியர்கள் கூடுதல் பாதுகாப்பை உணர்வதாகக் குறிப்பிட்டார் திரு சின்னப்பிள்ளை.
"இந்து அறக்கட்டளை வாரியத்தின் இதுபோன்ற பணிகள், இந்தப் பாதுகாப்பு உணர்வை மேம்படுத்துகின்றன," என்று அவர் குறிப்பிட்டார்.
சித்திரைப் புத்தாண்டு தினம், திரு சுப்பிரமணியன் மணிகண்டனுக்கு பிறந்தநாளாகவும் அமைந்தது. நில அதிர்வு கண்காணிப்பாளராக பணியாற்றும் இவருக்கு இந்தப் பலகாரங்கள் இரட்டிப்புக் கொண்டாட்ட உணர்வைத் தந்து உள்ளன. அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர் திரும்பும் 38 வயது மணிகண்டன், இந்த நிகழ்வு தமக்கு நல்ல நினைவாக மனத்தில் பதிந்துள்ளதாகச் சொன்னார்.
சிங்கப்பூரில் கடந்த 12 ஆண்டுகளாக கம்பிவடங்களைப் பொருத்தும் ஊழியராகப் பணிபுரியும் திரு சு.கனகராசு, 39, திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். ஈராண்டு இடைவெளிக்குப் பிறகு கடந்த டிசம்பர் மாதம் இவர் சிங்கப்பூருக்கு வந்தார். சொந்த ஊரில் நடைபெற்ற சித்திரைத் திருவிழா தொடர்பான படங்களையும் காணொளிகளையும் இவருடைய குடும்பத்தினர் இவருக்கு அனுப்பி வைத்தனர். அவற்றைக் கண்டுகளித்தார் திரு கனகராசு.
இந்து அறக்கட்டளை வாரியத்தின் ஆதரவுக்காக வெஸ்ட்லைட் தங்குவிடுதி நன்றி தெரிவித்துக்கொள்வதாகச் சொன்ன அதன் பேச்சாளர், வெளிநாட்டு ஊழியர் நலனுக்கான இதுபோன்ற திட்டங்களை வரவேற்பதாகவும் தமிழ் முரசிடம் கூறினார்.
சித்திரைப் புத்தாண்டுக்காக பலகாரங்களுடன், முஸ்லிம் ஊழியர்கள் அதிகமானோர் வசிக்கும் விடுதிகளில் ரமலான் மாதத்திற்காக ஏறத்தாழ 70,000 பேரீச்சம் பழங்களை இந்து அறக்கட்டளை வாரியம் வழங்கியது.