மாதவி இலக்கிய மன்றம் இம்மாதம் 4ஆம் தேதி மாலை ஆறு மணிக்கு, நாட்டின் 57வது தேசிய தினம், இவ்வாண்டின் ஆசிரியர் தினம் இரண்டையும் கொண்டாடும் விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தது. பாலஸ்டியர் சாலையில் அமைந்திருக்கும் 'சிலோன் ஸ்போர்ட்ஸ் கிளப்பில்' இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் நாடாளுமன்ற முன்னாள் நியமன உறுப்பினர் முகமது இர்ஷாத் தேசிய தின சிறப்புரை ஆற்றினார். சிங்கப்பூரின் சிறப்பு, 57 ஆண்டுகால வளர்ச்சி, பன்முகத்தன்மை, நான்காம் தலைமுறையின் பொறுப்புகள் ஆகியவை குறித்து அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், 42 ஆண்டுகள் ஆசிரியப் பணியில் இருந்து ஓய்வுபெற்ற திரு இரா. துரைமாணிக்கத்திற்கு, அமரர் கோ. சாரங்கபாணி நினைவு ஆசிரியர் தின விருதை நாடாளுமன்றத்தின் முன்னாள் நியமன உறுப்பினர் இரா. தினகரன் வழங்கினார். முனைவர் மன்னை இராசகோபாலனின் ஆசிரியர் தின சிறப்புரை, மாணவர்கள் படைத்த கலை நிகழ்ச்சிகள் ஆகியவை இடம்பெற்ற இந்நிகழ்ச்சியில் இருநூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.