வகுப்பறைக்கு அப்பாலும் இளையர்கள் அன்றாட வாழ்க்கையில் தாய்மொழியின் புழக்கத்தை வளர்த்துக்கொள்ள உதவும் 12 நிகழ்ச்சிகள் அண்மையில் தமிழ் இளையர் விழாவில் இடம்பெற்றன.
வளர்தமிழ் இயக்கத்தின் ஆதரவில், 'புத்தாக்கம்' எனும் கருப்பொருளைக் கொண்ட இவ்விழா, இம்மாதம் 3ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை, பள்ளி விடுமுறைக் காலத்தில் நடைபெற்றது.
இளையர் தமிழிசைப் போட்டி
இசைவாயிலாகத் தமிழ்மொழியின் ஆளுமையை உணரவைக்கும் பாட்டுப் போட்டிக்கு 'கலாமஞ்சரி' தமிழ் இசை பரப்பு மன்றம் ஏற்பாடு செய்திருந்தது. 'உழைப்பின் பெருமை', 'தமிழின் அருமை', 'இயற்கை வளமை' என்னும் தலைப்புகளில் தமிழ்க் கவிஞர்கள் இயற்றிய பாடல்களை, பங்கேற்பாளர்கள் குரல்பதிவாக சமர்ப்பித்தனர்.
ஏழு வயது முதல் 35 வயது வரையிலான 42 பேர் நான்கு பிரிவுகளில் கலந்துகொண்டனர்.
"இப்போட்டியின் மூலம் தமிழ்க் கவிஞர்கள் இயற்றிய பாடல்களைக் கற்றுக்கொண்டேன். எளிமையான வார்த்தைகளால் ஆழமான கருத்துகளை எழுதியிருந்தனர். மேலும் நிறைய தமிழ்ப் பாடல்களைக் கற்றுக்கொள்ள ஆவல் பிறந்துள்ளது," என்றார்் 13 முதல் 16 வயதுடையோர் பிரிவில் மூன்றாம் பரிசு வென்ற அக்ஷைனி தனபாலன்.
ஏழு முதல் 12 வயதானோருக்கான பிரிவில் முதல் பரிசு பெற்ற எட்டு வயதாகும் யாதனா பாலமுருகன் தனக்குப் பாட்டுப் போட்டி மிகவும் பிடிக்கும் என்றும் பாடல் வரிகளின் பொருளைத் தன் தந்தை விளக்கியதால் பாடலை எளிமையாகக் கற்றுக்கொள்ள முடிந்ததாகவும் கூறினார்.
திறன் போட்டி
நாடக வடிவில் தமிழின் சிறப்பை வெளிப்படுத்தும் விதமாக ஓரங்க நாடகமும் நகைச்சுவை படைப்புப் போட்டியும் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலைய அரங்கில் நடைபெற்றன. சிங்கப்பூர் இளையர் தமிழ் மன்றம் ஏற்பாடு செய்த போட்டியில் கலந்துகொண்ட 25 இளையர்களும் பெரும்பாலும் தமிழில் பேசியதாகவும் பொதுவாக இளையர்கள் மத்தியில் தமிழ்ப் புழக்கம் குறைந்துவரும் வேளையில் மாணவர்கள் கவனத்தை ஈர்க்க இத்தகைய நிகழ்ச்சிகள் அதிகம் நடைபெறவேண்டும் என்றும் கூறினார் மன்றத்தின் தலைவர் க. சத்திநாதன்.
நகைச்சுவைப் படைப்பு போட்டியில் முதல் பரிசை வென்றது மனிஷ், விகாஷினி குழு. கேசவன் மனிஷ்,13, "இத்தகைய நிகழ்ச்சிகள் தமிழ் பேசும் புதிய நண்பர்கள் கிடைப்பதற்கும் தமிழ் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டு திறன்களை வெளிக்காட்டவும் ஓர் அற்புதமான தளமாக அமைகிறது," என்றார். பியர்ஸ் உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த இவர் தன் தோழியுடன் 'ஸூம்' தளம் வழியாகப் பயிற்சி செய்ததாகக் கூறினார்.
ஓரங்க நாடகப் போட்டியில் முகமது ஜாஸிம், ஜெய்ரேவந்த் குழு முதல் பரிசை வென்றது. தஞ்சோங் காத்தோங் உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த முகமது ஜாஸிம், 13, தமிழின் முக்கியத்துவத்தை மற்ற இளையர்களிடம் கொண்டுசேர்க்கும் நோக்கில் இந்தப் போட்டியில் கலந்துகொண்டதாகக் கூறினார்.
செயின்ட் பேட்ரிக்ஸ் பள்ளியைச் சேர்ந்த ஜெய்ரேவந்த், 13, இதில் கலந்துகொண்டதன் மூலம் நாடகக் கலையின் நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டதாகக் கூறினார்.
இம்மாதம் செப்டம்பர் 10ஆம் தேதி நடைபெற்ற இப்போட்டியின் வெற்றியாளர்களுக்குப் பற்றுச்சீட்டுகளும் வெற்றிக் கிண்ணங்களும் வழங்கப்பட்டன.
சிலம்பு
ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தை மாணவர்களிடம் கொண்டுசேர்க்கும் நோக்கில் சக்தி நுண்கலைக் கூடம் 'சிலம்பு' எனும் நாட்டிய நிகழ்ச்சியை நடத்தியது.
சிலப்பதிகாரக் காப்பியம் மட்டுமே முத்தமிழை இணைக்க வல்லது என்பதால் இந்தப் புத்தாக்க முயற்சியை மேற்கொண்டதாகக் கூறினார் இதன் நடன இயக்குநர் தேவி வீரப்பன்.
இம்மாதம் 9ஆம் தேதி உட்லண்ட்ஸ் வட்டார நூலகத்தில் நடைபெற்றது இந்நிகழ்ச்சி. தமிழ்மொழியின் சிறப்பை இளையர்களுக்கு உணர்த்தும் இந்தப் படைப்பில் தன் மகளும் நாட்டியமணிகளில் ஒருவராகப் பங்குபெற்றது குறித்து தாயார் ஸ்வாதி தேவரசெட்டி பெருமிதம் தெரிவித்தார்.
படைப்பாளராக ஒரு நாள்
ஊடகத்துறையில் சாதிக்க விரும்பும் இளையரை ஊக்குவிக்கும் வண்ணம் பேச்சுப் போட்டியும் திறம்படப் பேசுவதற்கான பயிலரங்கும் சிங்கை தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றன.
தமிழ்மொழியை ஊடகத்துறை மூலம் கற்றுக்கொள்ளும் வழிமுறைகள், பார்வையாளர்களைக் கவரும் வகையில் பேசும் திறன், புத்தாக்கச் சிந்தனையுடன் புதிய நிகழ்ச்சிகளைப் படைக்கும் ஆற்றல் போன்ற அம்சங்கள் செப்டம்பர் 4ஆம் தேதி நடைபெற்ற பயிலரங்கில் கலந்துரையாடப்பட்டன.
இதில் பங்குகொண்ட பல்கலைக்கழக மாணவி வைஷ்ணவி ராஜேந்திரன், "பார்வையாளர்களின் கவனத்தைச் சிதறவிடாமல், நகைச்சுவையாகவும் ஒரு கருத்தை மையப்படுத்தியும் தடுமாறாமல் பேசுவது எப்படி என்பதைக் கற்றுக்கொண்டேன்," என்றார்.
இதில், ஆறு முதல் 12 வயதுஉடையோருக்கும் 17 முதல் 21 வயதுடையோருக்கும் இரு பிரிவுகளில் பேச்சுப் போட்டி நடத்தப்பட்டது. ஒவ்வொரு பிரிவிலும் தலா $400, $300, $200 மதிப்புள்ள பற்றுச்சீட்டுகள் பரிசுகளாக வழங்கப்பட்டன.
வரைகதை பயிலரங்கு
தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தமிழில் வரைகதை உருவாக்குவதற்கான பயிலரங்கு உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்காக நடைபெற்றது. ஆறு நாள் பயிலரங்கும் ஒரு நாள் கலந்துரையாடல் நிகழ்ச்சியுமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
வரைகதைக்குத் தேவையான கதாபாத்திரங்களை முடிவுசெய்வது, பின்னர் கதையை வண்ண வரைபடங்களாகத் தொகுத்து வரைகதை உருவாக்கும் விதம் ஆகியவை குறித்து மாணவர்களுக்குப் பயிற்றுவிக்கப்பட்டது.
'கிரியேட்டிவ் ஹேண்ட்ஸ்' நிறுவனத்தை நடத்திவரும் உயிரோவியக் கலைஞரான ஜெகன்னாத் ராமானுஜம், தமிழுக்கும் வரைகதைத் துறைக்குமான இடைவெளியைக் குறைக்கும் நோக்கில் இப்பயிலரங்கை நடத்தியதாகக் குறிப்பிட்டார்.
இதில் கலந்துகொண்ட ரிவர் சைடு உயர்நிலைப் பள்ளி மாணவர் சுரேஷ் குமார் ஸ்ரீபிரியன்,13, "வரைகதையை ஆங்கிலத்தில் மட்டுமே உருவாக்க முடியும் என்று நினைத்திருந்தேன். முக்கிய கதாபாத்திரங்களைச் சுற்றி எளிமையாகவும் கருத்துள்ளதாகவும் தமிழில் வரைகதை உருவாக்கக் கற்றுக்கொண்டேன்," என்றார்.
அதே உயர்நிலைப் பள்ளியில் பயிலும் விஷால் கண்ணன், "இதில் பங்கேற்றபோதுதான் வரைகதையின் பின்னணியில் பல திறமையாளர்களின் உழைப்பு இருப்பதைப் புரிந்துகொண்டேன். வரைகதை உருவாக்குவதற்கான பல்வேறு நுணுக்கங்களைத் தெரிந்துகொண்டேன்," என்று கூறினார்.
வரைதமிழ்
மாணவர்களிடையே தமிழ் வரைகலைமீதான ஆர்வத்தை வளர்க்கவும் இத்துறையில் நிபுணத்தும் அடைவதற்குப் பயிற்சி அளிக்கும் நோக்கிலும் உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான 'வரைதமிழ் பயிலரங்கு' இந்தியன் எஸ்ஜி அமைப்பினரால் நடத்தப்பட்டது.
இதில் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர். விதவிதமான வடிவங்களில் தமிழ் எழுத்துகளை எழுதும் பயிற்சி இதில் வழங்கப்பட்டது.
இலங்கையிலிருந்து பயிற்சி ஆசிரியர் தாரிக் அஸீஸ், 'ஸூம்' தளம் வழியாகப் பயிலரங்கை வழிநடத்தினார்.
தமிழ் எழுத்துகளை அழகாக எழுதுவதையும் வரைவதையும் முறையாக மாணவர்களுக்கு அறிமுகம் செய்ய இப்பயிலரங்கை ஏற்பாடு செய்ததாகக் கூறினார் பயிலரங்கின் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் திரு கல்யாண்குமார்.
இதில் பங்குகொண்ட சிராங்கூன் உயர்நிலைப் பள்ளி மாணவர் ஸ்ரீராம் கண்ணன், "மொழியைப் பேசுவது, வாசிப்பதுபோல எழுதுவதும் சுவையானது என்று உணர்ந்தேன். பல்வேறு விதங்களில் எழுதப் பயின்றதால் இனி அதிகம் எழுதப் போகிறேன்," என்றார்.
"வரைதமிழ் பயிலரங்கு மூலம் அழகாக எழுதக் கற்றுக்கொண்டேன். இனி விளக்கப்படங்களிலும் விளம்பரத் தட்டிகளிலும்கூட என்னால் அழகாக எழுத முடியும்," என்று தன்னம்பிக்கையுடன் கூறினார் இப்பயிலரங்கில் கலந்துகொண்ட டன்மன் உயர்நிலைப்பள்ளி மாணவி முகிழினி தென்றல் சிவராமநாதன்.