ஆய்வுக்கூட நிர்வாகி வி. நிசந்தராவும் அவரது பணிப்பெண் சோ திதாரும் சமையல் வல்லுநர்கள் அல்லர்.
ஆயினும், 42 உணவு வகைகள் மதிப்பிடப்பட்ட போட்டி ஒன்றில் இவர்கள் இருவரும் தயாரித்த ‘சுஷி பால்ஸ்’ நீதிபதிகளைக் கவர்ந்தது.
சர்க்கரை கலந்த காடியை (வினிகர்) சமைத்த சோற்றுடனும் இறைச்சித்துண்டுகளுடனும் சேர்த்துப் பிசைந்து உருண்டைகளாக்கிப் பொரித்தால் ‘சுஷி பால்ஸ்’ தயாராகிவிடும். வீட்டில் வழக்கமாகச் சமைப்பதில் மீதமாகும் உணவுப் பொருள்களை இதில் மூலப் பொருள்களாகச் சேர்க்கலாம் என்றார் திருவாட்டி நிசந்தரா.
பிறந்த வீட்டில் தாயார் சமைத்துவிடுவார் என்பதால் புகுந்த வீட்டில் தானே சமைப்பது நிசந்தராவுக்குப் புதிய அனுபவம். “சமூக ஊடகங்களைப் பார்த்து மெல்ல மெல்ல சில உணவு வகைகளைச் சமைக்கக் கற்றுக்கொண்டோம்,” என்றார் நிசந்தரா.
திருவாட்டி நிசந்தரா, தனது பச்சிளங் குழந்தையைப் பராமரிக்க மியன்மாரைச் சேர்ந்த சோவை ஆறு மாதங்களுக்கு முன்னர் பணியில் அமர்த்தினார். பண்டாநாவ் என்ற நகரில் விவசாயக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த சோ, தம் பெற்றோரையும் 15 வயது தம்பியையும் ஆதரிப்பதற்காக இங்கு பணிப்பெண்ணாக வேலைசெய்வதாகத் திருவாட்டி நிசந்தரா குறிப்பிட்டார்.
முதலாளி- ஊழியர் உறவுக்கு அப்பாற்பட்ட பாசம் இவ்விரு இளம் பெண்களைப் பிணைக்கிறது. இல்லப் பணியாளர்களுக்கான நிலையம் ஏற்பாடு செய்த போட்டிகளுக்கு செப்டம்பரில் விளையாட்டாக விண்ணப்பித்த இவ்விருவரின் முயற்சியைக் குடும்பத்தினர் கேலி செய்ததை நிசந்தரா நினைவுகூர்ந்தார்.
“நாங்கள் போட்டியின் சிறந்த 10 பங்கேற்பாளர்கள் பட்டியலில் இடம்பெற்றபோது அனைவரும் மலைத்துப்போனார்கள். இறுதியில் நாங்கள் வாகை சூடுவோம் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை,” என்று அவர் கூறினார்.
போட்டியாளர்கள் அனைவரின் சமையல் குறிப்புகளும் புத்தக வடிவில் கரையோரப் பூந்தோட்டத்தில் டிசம்பர் 10ஆம் தேதி வெளியீடு கண்டன. ‘சுஷி பால்ஸ்’ உணவை அண்மையில் கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது பரிமாறிய நிசந்தரா, குதூகலமான இந்தப் போட்டி அனுபவத்திலிருந்து பல அம்சங்களைக் கற்றுக்கொண்டதாகக் கூறினார்.