சிங்கப்பூரில் ஜீ தமிழின் ‘தமிழா தமிழா’ விவாத நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. இங்கு மூன்றாவது முறையாக நடைபெற்ற இந்நிகழ்ச்சி இவ்வாண்டு முதல்முறையாக மலேசியாவிலும் அறிமுகம் காணவுள்ளது.
இவ்வாண்டு புதிய முயற்சியாக ஆசிய பசிபிக் சிறப்பு அங்கம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
இதன்கீழ் சிங்கப்பூர், மலேசிய மக்களின் வாழ்க்கைச் சூழலை ஒத்த தலைப்புகளில் உள்ளூர் பேச்சாளர்களும் பொதுமக்களும் பங்குபெறும் பிரத்தியேக தொடர்கள் சிங்கப்பூர், மலேசிய ஜீ தமிழ் ஒளிவழிகளில் ஒளிபரப்பப்படும்.
இதனையொட்டி, சிங்கப்பூரில் டிசம்பர் 16ஆம் தேதி இரு ‘தமிழா தமிழா’ விவாத நிகழ்ச்சிகளுக்கான படப்பிடிப்பு நடைபெற்றது. இதில் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளிலிருந்து 60க்கும் மேற்பட்ட பேச்சாளர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
‘இன்றைய இளையர்களுக்கு நவீன வாழ்வின் சவால்களை எதிர்கொள்ள குடும்பமும் சமுதாயமும் உறுதுணையாக இருக்கிறதா? இல்லையா?’, ‘இன்றைய ஜென் ஜீ தலைமுறையால் உருவாக்கப்படும் வேலை கலாசாரம் சிந்திக்க வைக்கிறதா? வேலைச் சூழலை சிதைக்கிறதா?’ ஆகிய இரு தலைப்புகளில் இந்த விவாதங்களின் படப்பிடிப்பு நடந்தேறியது.
உள்ளூர்ச் சூழலில் இக்கால இளையர்கள் சந்திக்கும் சவால்களைப் பிரதிபலிக்கும் இந்த விவாதங்களில், சிறப்பு அங்கமாக இரு தலைப்புகளை ஒட்டி நிபுணத்துவ வழிகாட்டுதல் வழங்கும் சிறப்புப் பேச்சாளர்களும் பங்குகொண்டனர்.
தமிழ்நாட்டில் ஒளிபரப்பாகும் ‘தமிழா தமிழா’ நிகழ்ச்சியை அண்மைக் காலமாக தொகுத்து வழங்கும் திரு ஆவுடையப்பன், 29, இந்த நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கினார். முதல்முறையாக சிங்கப்பூர் வந்துள்ள அவர், சிங்கப்பூர் தமிழர்கள் தமிழைக் கொண்டாடும் விதம் தம்மை ஆச்சரியப்படுத்தியதாகக் கூறினார்.
“சிங்கப்பூரில் ஆட்சி மொழிகளில் ஒன்றான தமிழ் மொழிக்கு கிடைக்கும் அங்கீகாரம் ஒரு தமிழனாக எனக்கு மிகவும் பெருமையளிக்கிறது. பெருவிரைவு ரயில் நிலையங்கள் முதல் கடைகளின் பெயர்ப் பலகைகள் வரை எங்கும் தமிழைக் காண முடிகிறது,” என்றும் அவர் சொன்னார்.
மேலும், இங்குள்ள தமிழ் அமைப்புகளின் பங்களிப்பும் அதில் சிங்கப்பூர் இளையர்களின் ஈடுபாடும் தம்மை பரவசப்படுத்தியதாகவும் ஆவுடையப்பன் கூறினார். குறிப்பாக, இளையர்களை ஒட்டிய இரு விவாதங்களிலும் அதிக அளவு தமிழ் இளையர்கள் ஆர்வமாக பங்குகொண்டது அவர்களுக்கு தாய்மொழியின் மீதுள்ள ஈடுபாட்டையே காட்டுகிறது என்றார் அவர்.
இது குறித்து ஜீ தமிழ் ஆசிய பசிபிக் அங்கத்தின் தலைவர் சன்மேஷ் தாகூர் கூறுகையில், “சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் உள்ள எங்கள் பார்வையாளர்களிடம் ‘தமிழா தமிழா’ ஏற்படுத்தியுள்ள நேர்மறைத் தாக்கம் எங்களுக்கு அதிக உற்சாகம் அளித்துள்ளது.
“இதற்காகவே இம்முறை புதிய முயற்சியாக சிங்கப்பூர், மலேசியாவுக்கென பிரத்தியேக ஆசிய பசிபிக் சிறப்பு அங்கத்தை அறிமுகப்படுத்தி உள்ளோம்,” என்றார்.
படப்பிடிப்பு முடிந்துள்ள சிங்கப்பூர் விவாத நிகழ்ச்சிகள் இவ்வாண்டின் முதல் காலாண்டில் ஒளிபரப்பப்படும் என்றும் இந்த நிகழ்ச்சியை மலேசியாவில் நடத்தும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டது.