நீண்ட நேரம் அமர்ந்தே பணிபுரியும் பலருக்கும் உடலின் பல பாகங்களில் வலி ஏற்படும். இவற்றை கவனிக்காமல் விட்டால், நாட்பட்ட பிரச்சினைகள் உருவாகும் என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். இவற்றைத் தடுக்க வழிமுறைகளைப் பின்பற்றுவது அவசியம்.
முதல் வழிமுறை, ‘எர்கோனோமிக்ஸ்’. பணிச்சூழலில், ஒவ்வொருவரது உயரம், உடல்வாகுக்கேற்ப, அமரும் நிலை, மேசை, நாற்காலியின் உயரம், மேசையின் அகலம், நாற்காலிக்கும், கணினித் திரைக்குமான தூரம், அதை ஒட்டி தீர்மானிக்கப்பட்ட கணினித் திரையின் அளவு என அனைத்தையும் பார்த்து வடிவமைத்துக் கொள்வது ‘எர்கோனோமிக்ஸ்’ பணியிடச் சூழல்.
இதனைப் பின்பற்றுவதால், உடலின் பொது தோரணை சீராகும்; கண், தசைகளில் ஏற்படும் வலி முதல், நீண்ட நேரம் அமர்வதால் ஏற்படும் பல்வேறு உடல் நலப் பிரச்சினைகள் வரை தடுக்க முடியும் என்கிறார் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர், இணைப் பேராசிரியர் ஹமீத் ரசாக்.
முதுகு, இடுப்புப் பகுதியைச் சாய்த்து வைக்கும் அளவு போதிய வசதி கொண்ட, உயரத்தைக் கூட்டிக் குறைக்க ஏதுவான நாற்காலியைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்கிறார் அவர்.
நாற்காலியில் அமரும்போது, எப்போதும் முழங்கால்கள் இடுப்பின் மட்டத்தில் இருக்கும் வகையில் அமர்வது அவசியம் என்றும் வலியுறுத்துகிறார் ஹமீத் ரசாக்.
இவ்வாறு தொடர்ந்து உட்கார்ந்தபடி பணியாற்றுவதால் ஏற்படும் வலியைக் கட்டுப்படுத்த, வலி இருக்கும் பகுதிகளில் ‘ஐஸ்’ கொண்டு ஒத்தடம் கொடுக்கலாம் என்கிறார் ஹமீத் ரசாக்.
கழுத்து, முதுகு, முழங்கால்களை நீட்டி மடக்கும் மென்மையான உடற்பயிற்சிகளை இயன்றவரை மேற்கொள்ளலாம் என்று அவர் கூறினார்.
பணி முடிந்து தூங்கும்போது, வசதியான அமைப்பில், கூடுதல் தலையணைகள் கொண்டு தூங்க வேண்டும் என்று கூறும் இவர், தொடர்ந்து இரு வாரங்கள் வலி குறையாமல் தொடர்ந்தாலோ, அதிகமாவதை உணர்ந்தாலோ, உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதனை செய்துகொள்வது நல்லது என்றும் பரிந்துரைக்கிறார்.