மலேசிய அமைச்சரவை சகாக்களை மாற்றி அமைக்கப்போவதாக மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மது பல மாதங்களாகக் கூறிவந்த வேளையில், மலேசியாவின் கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக் இன்று (ஜனவரி 2) தனது பதவியிலிருந்து விலகியுள்ளார்.
பல்கலைக்கழகப் பேராசிரியராகப் பணிபுரிந்த டாக்டர் மஸ்லீ, 45, முதல் முறையாக நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2018ஆம் ஆண்டில் பொதுத் தேர்தல் நடைபெறுவதற்கு சில மாதங்களுக்கு முன்புதான் அவர் அரசியலில் அடியெடுத்து வைத்தார். 20 மாதங்களுக்கு முன்பு கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்றதிலிருந்து பெரிதளவில் விமர்சிக்கப்பட்ட அமைச்சர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவரது தடுமாற்றங்கள் செய்தித் தாள்களில் தலைப்புச் செய்தியானதுடன் பல ‘மீம்’களுக்கும் வழிவகுத்தன. கடந்த ஆண்டு சுமார் 160,000 பேர் கையெழுத்திட்ட இணையப் புகார் மனு ஒன்று அவரை அந்தப் பதவியிலிருந்து மாற்றக் கோரியது.
பிரதமர் மகாதீரின் அறிவுரைப்படி, கனத்த இதயத்துடன் தனது பதவியிலிருந்து விலகுவதாக அவர் இன்று (ஜனவரி 2) செய்தியாளர் கூட்டத்தில் அறிவித்தார். அப்போது, கல்வி அமைச்சராக தமது சாதனைகளையும் அவர் பட்டியலிட்டார்.
பிரதமர் மகாதீரின் தலைமையிலான பிரிபூமி பெர்சாத்து மலேசியா கட்சியைச் சேர்ந்த டாக்டர் மஸ்லீ ஜோகூரின் சிம்பாங் ரெங்கம் பகுதியிலிருந்து நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
திரு மஸ்லீக்கு பதில் கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்பவர் பற்றி முடிவெடுக்கப்பட்டபின் அறிவிக்கப்படும் என்று பிரதமர் மகாதீர் குறிப்பிட்டார்.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity