கோலாலம்பூர்: மலேசிய பள்ளிகளில் பொங்கல் திருநாள் கொண்டாட்ட நிகழ்ச்சியால் ஏற்பட்ட சர்ச்சையால் பள்ளிகளில் பொங்கல் கொண்டாட்டம் தேவையா என்ற கேள்விகள் எழுந்தன.
இந்நிலையில் அந்நாட்டின் பொங்கல் திருநாள் கொண்டாட்டம் இந்து சமயத்தவரது கொண்டாட்டம். இதுபோன்ற கொண்டாட்டங்களை பல இனத்தைச் சேர்ந்த மாணவர்கள் பயிலும் பள்ளிகளில் நடத்தப்படக்கூடாது என்று கல்வி அமைச்சு கூறியது. அதற்குப் பதிலளிக்கும் வகையில் மலேசிய அமைச்சர் ஒருவர், பொங்கல் சமயம் சார்ந்த கொண்டாட்டம் இல்லை, அது ‘அறுவடைத் திருநாள்’ என்று கூறியிருந்தார். இந்தச் சர்ச்சை ஓய்வதற்குள் மலேசிய மாமன்னர் அப்துல்லா ரியாதுடின் அல்-முஸ்தபா பில்லா ஷா மற்றும் இளவரசி அஸிஸா அமினா மைமுனா இஸ்கந்தரியா ஆகியோர் சமூக ஊடகங்களிலும் அரச மாளிகையின் அதிகாரபூர்வ இன்ஸ்டகிராம் பக்கத்திலும் மலேசிய இந்திய சமூகத்தினருக்கு பொங்கல் திருநாள் வாழ்த்துத் தெரிவித்துக் கொண்டுள்ளனர். அதைத்தொடர்ந்து பிரதமர் மகாதீர், துணைப் பிரதமர் வான் அஸிஸா இஸ்மாயில், பொருளியல் விவகாரத் துறை அமைச்சர் அஸ்மி அலி ஆகியோரும் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டனர்.