கோலாலம்பூர்: சர்சைக்குரிய சரவாக் சூரிய சக்தி திட்டத்தில் நிகழ்ந்த முறைகேடுகளில் மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கும் அவரது மனைவி ரோஸ்மா மன்சூருக்கும் இருந்த பங்கை வெளிச்சத்துக்குக் கொண்டு வரப்போவதாக வர்த்தகர் ஒருவர் மிரட்டியதாக மலேசிய உயர் நீதிமன்றத்தில் நேற்று தெரிவிக்கப்பட்டது.
சூரிய சக்தித் திட்டத்துக்கான ஒப்பந்தம் தமக்குக் கிடைக்காவிடில் முறைகேடுகள் பற்றி புகார் செய்யப்போவதாக ஜெபாக் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் வர்த்தகப் பங்காளியான திரு ராயன் ரட்ஸ்வில் அப்துல்லா ரோஸ்மாவை மிரட்டியதாக வழக்கு விசாரணையின் ஆறாவது சாட்சியான கல்வி அமைச்சின் முன்னாள் தலைமைச் செயலாளர் டாக்டர் மதினா முகம்மது நேற்று கூறினார்.
மலேசியாவின் பிரதமராக நஜிப் பதவி வகித்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக அவர் தெரிவித்தார்.
சராவாக்கில் உள்ள பள்ளிகளுக்கு சூரிய சக்தி சாதனங்களை வழங்குவதற்கான ஒப்பந்தத்தை ஜெபாக் ஹோல்டிங்ஸ் நிறுவனம் பெற உதவி செய்ததற்காக ரோஸ்மாவுக்கு 6.5 மில்லியன் ரிங்கிட் கிடைத்ததாக அரசாங்க வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ரோஸ்மா மீது மூன்று ஊழல் குற்றச்சாட்டுகள் பதிவாகி உள்ளன. இந்த ஊழல் குற்றங்கள் 2016, 2017 ஆண்டுகளில் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை ரோஸ்மா மறுத்துள்ளார். நஜிப் உத்தரவிடாமல் இருந்திருந்தால் ஜெபாக் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் விண்ணப்பத்துக்குக் கல்வி அமைச்சு ஒப்புதல் அளித்திருக்காது என்றார் டாக்டர் மதினா.