கோலாலம்பூர்: மலேசியாவில் கொரோனா கிருமி பரவலைத் தடுத்து நிறுத்துவதற்காக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நடமாட்டக் கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பெட்டாலிங் ஜெயாவில் கடந்த 24 மணி நேரத்தில் கட்டுப்பாட்டை மீறி வெளியில் சுற்றிய 15 பேரை போலிசார் கைது செய்துள்ளனர்.
இது குறித்து பேசிய பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலிஸ் துணை ஆணையர் நிக் எஸானி முகமட் ஃபைசால், கைது செய்யப்பட்டவர்கள் சட்டத்தை மீறியுள்ளனர் என்றார்.
நடமாட்டக் கட்டுப்பாட்டை மீற வேண்டாம் என்றும் அவர் பொதுமக்களை கேட்டுக் கொண்டார்.
“வீட்டிலேயே தங்கியிருங்கள், முக்கியமான தேவைக்கு மட்டுமே வெளியே செல்லுங்கள்,” என்று அறிக்கை வாயிலாக அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே சுகாதார அமைச்சில் பணியாற்றும் 80 ஊழியர்களுக்கு கொரோனா கிருமி தொற்றியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. “கிருமியால் பாதிக்கப்பட்டவர்கள் முன்னணி ஊழியர்கள் அல்ல,” என்று ஆரம்பக் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா சொன்னார்.