இதற்கிடையே, மலேசியாவில் இன்று (மார்ச் 28) கிருமிதொற்றால் புதிதாக 159 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக மலேசியாவின் சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
அதனையடுத்து, அங்கு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,320 ஆகியுள்ளது.
இன்று மேலும் ஒருவர் கிருமித்தொற்று சிகிச்சை பலனின்றி இறந்துபோனதாகவும், மாண்டோர் எண்ணிக்கை 27க்கு அதிகரித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இன்று உயிரிழந்த 61 வயதான மலேசிய ஆடவருக்கு நாட்பட்ட நீரிழிவு, உயர் ரத்த அழுத்தப் பிரச்சினைகள் இருந்தன.
இன்று மேலும் 61 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதையடுத்து, சிகிச்சை முடிந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 320 ஆக உயர்ந்தது.
சிகிச்சை பெற்று வருவோரில் 73 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாகவும் அவர்களில் 54 பேருக்கு செயற்கை சுவாசக் கருவிகள் தேவைப்படுவதாகவும் டாக்டர் ஹிஷாம் தெரிவித்தார்.
அண்மைய நாட்களில் வெளிநாடுகளிலிருந்து திரும்பி வந்தோரிடையே கிருமித்தொற்று அதிகரித்திருப்பதாகக் குறிப்பிட்ட அவர், வெளிநாடுகளிலிருந்து திரும்பியோருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் மலேசியா திரும்பியதும் அவர்கள் 14 நாட்களுக்குத் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.
இந்நிலையில் தலைநகர் கோலாலம்பூரை கிருமித்தொற்று இல்லாத நகரமாக மாற்றும் நோக்கில் அங்கு ஆழ்ந்த துப்புரவுப் பணிகள் முடுக்கிவிடப்பட்டன. நூற்றுக்கணக்கான ஊழியர்கள் கிருமிநாசினிகளை தெருக்கள், கட்டடங்கள், வாகனங்கள் என அனைத்துப் பகுதிகளிலும் தெளிக்கும் பணியில் இன்று ஈடுபட்டனர்.
இந்நிலையில், மலேசியாவில் நடப்பில் இருக்கும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீறியதாக 400க்கு மேற்பட்டோர் இன்று கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடையே, சீனாவிலிருந்து மருத்துவப் பொருட்கள், முகக்கவசங்கள் போன்றவை மலேசியாவுக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
100,008 நியூக்ளிக் அமில பரிசோதனைக் கருவித்தொகுப்பு, 100,000 எண்ணிக்கையிலான N95 முகக்கவசங்கள், 500.000 அறுவை சிகிச்சையின்போது அணியப் பயன்படும் ரக முகக்கவசங்கள், 50,000 தனிநபர் பாதுகாப்புக் கவசங்கள், 200 செயற்கை சுவாசக் கருவிகள் ஆகியவை இன்று மலேசியாவுக்கு வந்து சேர்ந்தன.
அவற்றை நீண்ட கால நட்பின் அடையாளமாக பரிசாக அனுப்பி வைப்பதாக சீனா குறிப்பிட்டது. உரிய நேரத்தில் உதவியதற்காக சீனாவுக்கு மலேசியாவும் நன்றி தெரிவித்துக்கொண்டது.
#மலேசியா #கொவிட்-19