மலேசியாவில் மேலும் மூன்று பகுதிகள் ‘கொவிட்-19 அபாயமுள்ள சிவப்புப் பகுதிகளாக’ அறிவிக்கப்பட்டுள்ளன என்று சுகாதார அமைச்சு இன்று (ஏப்ரல் 7) தெரிவித்தது.
நேற்று நண்பகல் நிலவரப்படி புத்ராஜெயாவின் மத்திய பகுதி, ரெம்பாவ், நெகிரி செம்பிலான், மலாக்காவில் உள்ள ஜாசின் ஆகியவை ‘சிவப்பு பகுதி’களாக அறிவிக்கப்பட்டிருந்தன. இவை ஒவ்வொன்றிலும் 40க்கு மேற்பட்ட கொவிட்-19 சம்பவங்கள் பதிவானதையடுத்து அந்த அறிவிப்பு செய்யப்பட்டது.
புத்ராஜெயாவிலும் ரெம்பாவ்விலும் தலா 41 சம்பவங்களும் ஜாசினில் 42 சம்பவங்களும் நேற்று பதிவாகின.
நெகிரி செம்பிலானில் ஏற்கெனவே சிரம்பான் ‘சிவப்பு பகுதியாக’ அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ரெம்பாவ்வும் அந்த நிலைக்குச் சென்றுள்ளது. மலாக்காவின் முதல் சிவப்புப் பகுதியாக ஜாசின் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆக அதிகமாக 386 கொவிட்-19 சம்பவங்களுடன் லெம்பா பென்டாய் முதலிடத்திலும் 324 சம்பவங்களுடன் ஹுலு லெங்காட் இரண்டாமிடத்திலும் 296 சம்பவங்களுடன் பெட்டாலிங் மாவட்டம் மூன்றாமிடத்திலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.