மலேசியாவில் கிருமித்தொற்று கண்ட 4,228 பேரில் 416 பேர் வெளிநாட்டினர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலேசிய சுகாதார அமைச்சின் இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா இன்று (ஏப்ரல் 9) வெளியிட்ட அறிக்கையில், கிருமித்தொற்று கண்ட வெளிநாட்டினர் பற்றிய தகவல்களை வெளியிட்டார்.
இந்திய நாட்டவர் 37 பேர், இந்தோனீசியர்கள் 53 பேர், மியன்மார் நாட்டவர் 31 பேர், பாகிஸ்தானைச் சேர்ந்த 29 பேர், பிலிப்பீன்ஸ் நாட்டைச் சேர்ந்த 27 பேர் என மொத்தம் 416 வெளிநாட்டினர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
“வெளிநாட்டினருக்கு கிருமித்தொற்று ஏற்பட்டால் அவர்கள் நாட்டு தூதரகத்துக்கு தகவல் தெரிவிப்போம்,” என்றார் அவர்.
கோலாலம்பூரில் உள்ள சிலாங்கூர் மேன்சன், மலாயன் மேன்சன் ஆகிய இரண்டிலும் நேற்று விரிவுபடுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை விதிக்கப்பட்டது.
அவ்விரு கட்டடங்களிலிருந்து யாரும் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது. அவற்றில் வசிக்கும் சுமார் 5,000 பேரில் பலர் வெளிநாட்டினர் என்று தெரிவிக்கப்பட்டது.
அந்தக் கட்டடவாசிகள் அனைவருக்கும் கிருமித்தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இவ்விரு இடங்களிலும் இதுவரை 15 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மலேசியாவில் இன்று புதிதாக 109 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதையும் சேர்த்து அங்கு மொத்தம் 4,228 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இரண்டு புதிய மரணங்களைத் தொடர்ந்து அங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 67 ஆகியுள்ளது. யுனிவர்சிட்டி மலேசியா சரவாக்கைச் சேர்ந்த 23 வயது ஆடவர், மலேசியாவில் உயிரிழந்த ஆக இளையவர் என்று இன்று தெரிவிக்கப்பட்டது. தைராய்டு பிரச்சினை உள்ள அந்த இளையர் சுவாசப் பிரச்சினை காரணமாக மார்ச் மாதம் 30ஆம் தேதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் இன்று காலை 9.42 மணிக்கு உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
இன்று குணமடைந்து வீடு திரும்பிய 121 பேரையும் சேர்த்து அங்கு இது வரை 1,608 பேர் கிருமித்தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறும் 72 பேரில் 43 பேருக்கு செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே, மலேசியாவில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நீட்டிக்கப்படுமா என்பது குறித்து நாளை முடிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.